புதன், 9 நவம்பர், 2016

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி..ரூ.500, 1000 நோட்டு வாபஸ் .. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

மும்பை : ரூ.500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று
அறிவித்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.>கடும் வீழ்ச்சி : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி பின்னடைவை சந்தித்து வருவதாலும், இந்தியாவில் ரூ.500, 1000 நோட்டுக்களுக்கு அதிரடியாக வாபஸ் பெறப்பட்டதாலும் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழச்சி அடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1600 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 8100 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (நவம்பர் 9 காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 1584.19 புள்ளிகள் சரிந்து 26006.95 புள்ளிகளாகவும், நிப்டி 474 புள்ளிகள் சரிந்து 8069.55 புள்ளிகளாகவும் உள்ளன. வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளன.
பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியின் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகளும் சரிந்துள்ளன.
தங்கம் விலை உயரும் அபாயம் :

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்துள்ளதால் கறுப்பு பணம் பதுக்கி இருப்போர் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் தங்கம் விலை கிராமுக்கு ரூ.4000 வரை உயரலாம் என அஞ்சப்படுகிறது. திருமண முகூர்த்த காலத்தில் தங்கம் விலை சற்றும் எதிர்பாராத விதத்தில் அதிரடியாக கடுமையாக உயர்ந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,000 முதல் ரூ.34,000 வரை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: