சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உட்பட, நால்வரை, கர்நாடகா உயர்
நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, அம்மாநில அரசு, உச்ச
நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்துள்ளது.அதன் மீதான விசாரணை
விவரம், அடுத்த வாரத்தில் தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச்
சூழலில், இதில், தி.மு.க.,வின் நிலை குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை
நடத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து, தி.மு.க., சட்டப்பிரிவு
நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கர்நாடகா உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவை விடுதலை
செய்ததும், அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்வது என, முடிவு செய்து
விட்டோம்; ஆனால், கர்நாடகா அரசின் நிலைப்பாட்டை அறிவதற்காக காத்திருந்தோம்.
தற்போது, கர்நாடகா அரசு, மேல்முறையீடு செய்துள்ளது. எனவே, வழக்கில்
புகார்தாரர் என்ற முறையில், தி.மு.க., தரப்பிலும், மேல்முறையீடு மனு
போடுவதா அல்லது கர்நாடகா தொடர்ந்துள்ள வழக்கில், இணைந்து கொள்வதா என,
ஆலோசிக்கப்படுகிறது.