புதன், 9 நவம்பர், 2016

அடுத்தவீட்டு பாட்டி தலையில் கல்லைப்போட்ட மோடி .. 30 வருசமா சேர்த்த 50 ஆயிரத்துக்கு கணக்கு காட்ட எங்கே போவது?

நந்தன் ஸ்ரீதர்: நிறைய நண்பர்கள் மோடியின் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்கள். மத்திய கிழக்கிலிருந்து போன் செய்த நெருங்கிய நண்பன் ஒருவன் கூட இதை வரவேற்பதாக போனில் சொன்னான். நல்ல வேளை போன் லைன் கட்டாகிவிட்டது..
மோடியின் இந்த முடிவின் மூலம் கறுப்புப் பணம் எல்லாம் வெளிவந்து விடும் என்று நம்பும் அப்பாவி நண்பர்களை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியாக நம்பும் நண்பர்களில் மெத்தப் படித்த அறிவுஜீவி நண்பர்களும் இருப்பது மிக மிக ஆச்சரியமாக இருக்கிறது..
வரி கொடாமல், கணக்குக் காட்டாமல் வங்கிகளில் சேர்ப்பிக்கப் படாமல் ரொக்கமாக பதுக்கி வைத்திருக்கும் பணமே கறுப்புப் பணம்.. இல்லையா..?
சரி.. மோடியின் இந்த அதிரடி அறிவிப்பால் என்ன நடக்கும்..?

நந்தன் ஸ்ரீதர்உடனே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் முன் வந்து தங்கள் கறுப்புப் பணத்தை அறிவித்துவிட்டு ஜெயிலுக்குப் போகப் போகிறார்களா..? இல்லை.. இப்படி மாட்டுவதற்கு பதிலாக பணத்தை எரித்து விடலாம் என்று எரித்து விடப் போகிறார்களா..?
நிச்சயம் இரண்டும் நடக்காது என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.
அம்பானி, அதானி போன்ற பெரும் கோடீஸ்வர வரிஏய்ப்பாளர்களுக்கு இந்த அறிவிப்பால் பெரிய பாதிப்பு இல்லை என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.. ஒரு வேளை அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்று தெரிந்தால் நிச்சயம் மோடியே இந்த மாதிரி முடிவை அறிவித்திருக்க மாட்டார்..
அப்புறம் யாருக்கு இந்த பாதிப்பு..?
லோக்கல் பணக்காரர்களில் கணக்கு காட்டாமல் சில பல லட்சங்களையோ சில பல கோடிகளையோ பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களுக்கும் ஐநூறு ஆயிரம் கோடி ரூபாய்களாக பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும்தான் பாதிப்பு இருக்கும்..
சரி..
இவர்கள் இந்த அறிவிப்பால் என்ன மாதிரி பாதிக்கப் படப் போகிறார்கள் மற்றும் இந்த அறிவிப்பால் என்ன மாதிரியான நன்மை இந்த நாட்டுக்கு விளையப் போகிறது.?
யோசித்துப் பாருங்கள்.. நான் முன்னமே சொன்ன மாதிரி அவர்கள் ஜெயிலுக்குப் போகவோ அல்லது பணத்தை எரிக்கவோ மாட்டவே மாட்டார்கள்.. மாறாக உள்ளூர் பாஜக விஐபியில் இருந்து நேரடியாக மோடி வரை அப்ரோச் பண்ணப் போகிறார்கள். என்னிடம் இவ்வளவு கறுப்புப் பணம் இருக்கிறது.. அதில் இவ்வளவு உங்களுக்குத் தந்து விடுகிறேன். இவ்வளவை எனக்கு விட்டுக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லப் போகிறார்கள். அவ்வளவே.. கீழிருந்து மேலாக கமிஷன் போக அவர்களுக்கு கொஞ்சம் மிஞ்சப் போகிறது..
இதில் யார் கொழிக்கப் போவது..? ஏற்கெனவே லஞ்சப் பணத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் மத்திய பாஜக பிரமுகர்களும் பாஜக கட்சியினரும் மட்டுமே..
ஆக இந்த அறிவிப்பு பாஜக வுக்கு அறுவடை காலம்.. நம் மக்களுக்கு மட்டுமே சிரம காலம்.. தினமும் ஐநூறு ரூபாய் கூலி வாங்கும் தொழிலாளி இரண்டு நாளுக்குப் படாத பாடு படப் போகிறான். ஏற்கெனவே செலவுக்குப் பணம் எடுத்து வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினன் படாத பாடு படப் போகிறான்..
மத்திய கிழக்கிலிருந்து போன் செய்த நண்பனிடம் கேட்டேன்.. ஏன்ப்பா.. ஒண்ணரை சதம் பணக்காரர்களிடம் இருந்து இந்த திட்டத்தின் மூலம் கறுப்புப் பணத்தை மோடி வெளியே கொண்டு வந்து விடுவார் என்று நீ நம்புகிறாயா என்று.. அப்படி எல்லாம் நம்பிக்கை இல்லை.. ஆனாலும் இந்த திட்டத்துக்காக நம் நாட்டு மக்கள் இரண்டு நாள் கஷ்டப் பட்டால் பரவாயில்லை என்றான் அவன்..
இதுதான் இந்த திட்டத்தை ஆதரிப்பவர்களின் பொது மன நிலை.. அவர்களுக்கு கிரெடிட் கார்டுகளும் டெபிட் கார்டுகளும் உள்ளன.. பொருள் வாங்கவோ வேறு எதற்குமோ அவர்களுக்குப் பிரச்சினை இல்லை.. எளிய மக்களின் சிரமங்களைப் பற்றி அவர்களுக்கு பிரச்சினையே இல்லை..
ஒரு வேளை அவர்கள் எளிய மக்களில் இருந்து முன்னேறி இருந்தாலும் எளிய மக்கள் பற்றி அவர்களுக்கு எள்ளளவும் கவலை இல்லை.. ரெண்டு நாள்தானே.. அவர்கள் பட்டினி கிடந்து விட்டுப் போகட்டுமே.. ரெண்டு நாள் அவர்கள் கஷ்டப் பட்டால் என்ன போச்சு என்று மனிதாபிமானமே இல்லாமல் பேசுவார்கள்..
மொத்தத்தில் இந்த அறிவிப்பால் பாஜகவின் கஜானாவில் கறுப்புப் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டப்போகிறது.. எளிய மக்களின் பசித்த வயிறு மேலும் காயப் போகிறது.. அவர்கள் கையில் இருக்கும் ஒன்றிரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை மாற்ற அவர்கள் அலைந்து சீரழியத்தான் போகிறார்கள்.. இதைத் தவிர வேறேதும் புரட்சி நடந்துவிடப் போவதே இல்லை..
நந்தன் ஸ்ரீதரன், எழுத்தாளர்; வசனகர்த்தா.  thetimestamil.com

கருத்துகள் இல்லை: