சனி, 12 நவம்பர், 2016

புதிய நோட்டுகளில் தேவ நகரி எழுத்துகள்.. அது என்ன மொழி? :சமஸ்கிருதத்துக்கு எழுத்துவடிவம் கிடையாது 6 ஆம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்து பாவனைக்கு வந்தது

இளங்கோ சிவன்: தேவநாகரி எழுத்தில் புதிய ரூபாய் நோட்டுகளில் எண்கள்
அச்சடிக்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. அது என்ன தேவ நாகரி எழுத்து. தேவர்கள் எப்பொழுது எழுத்தை கண்டுபிடித்தார்கள். சரி இல்லையெனில் ஏன் அந்த எழுத்துக்கு அவ்வாறு பெயர் கொடுக்கப்பட்டது.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் வடபகுதியில் சமஸ்கிருத மொழியை எழுத வழங்கப்பட்ட ஒரு வகை எழுத்துகளை நாகரி என்பர். இதை ‘தேவநாகரி’ என்றும் அழைப்பர். கி.பி 8க்குப் பிறகே இவ்வெழுத்து வடபுலப்பகுதியில் சிறப்பு பெற்றது. தமிழகத்திலும் இவ்வெழுத்து புழக்கத்தில் இருந்தது.
சமஸ்கிருதம் எப்பொழுது எழுதப்பட்டது என்று பார்த்தால் அதற்கு எழுத்துவடிவமே இல்லை என்பதே உண்மை. இதனாலேயே அது எழுதாக் கிளவி என்று கூறப்பட்டது. இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு எழுத்து வடிவில் எழுதிப் படிக்கிறோம். இது இரவல் வாங்கியது! சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது.

பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி மொழி உருவாகிய பின் வடநாட்டினர் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவத்தை இந்தி வடிவில் கொடுத்ததுதான் தேவநாகரி.
அப்படியானால் மிகப் பழங்காலத்தில் சமஸ்கிருதம் உருவான போது ஏன் எழுத்து வடிவம் அதற்கு இல்லை? ஒரு நொண்டிச் சமாதானம் அதற்குச் சொன்னார்கள் – எழுதினால் அதற்கு ஆற்றல் போய்விடுமாம்!
இது இப்படி இருக்க மேற்கண்ட தமிழ் எழுத்துக்கள் கிறித்து பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே எழுதப்பட்டு வந்திருக்கிறது என்று ஓமன் நாட்டில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லுகளைப்போல பல சான்றுகள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுத்துவடிவம் பயன்பாட்டில் இருந்தது புலப்படும்.
(நூல்கள், இணையம் இவற்றில் இருந்து தொகுக்கப்பட்டது. மேலும் இதனை விரிவாக விவாதிப்பதன் மூலம் தமிழின் காலப் பழமை வெளிச்சத்திற்கு வரும்.)
இளங்கோ சிவன், தொல்லியலாளர். thetimestamil.com

கருத்துகள் இல்லை: