ஐதராபாத்: ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம்
உருவாக்குவது என்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ்
செயற்குழுவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர அமைச்சர்கள், 13
பேரும், எம்.எல்.ஏ.,க்கள், 20 பேரும், எம்.எல்.சி.,க்கள், ஒன்பது பேரும்,
நேற்று தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். "மாநிலத்தைப் பிரிக்கும்
முடிவை, காங்கிரஸ் செயற்குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில்,
பொதுமக்களுடன் இணைந்து போராடுவோம்' என்றும் எச்சரித்துள்ளனர்.
ஆந்திராவை
பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கக் கூடாது என, எதிர்ப்பு
தெரிவித்து, தெலுங்கானா தவிர்த்து பிற பகுதிகளில், ஒருங்கிணைந்த ஆந்திரா
ஆதரவாளர்கள், இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். இதனால்,
மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணா, கிழக்கு
கோதாவரி, விசாகப்பட்டினம், கடப்பா மற்றும் அனந்தப்பூர் மாவட்டங்களில்,
போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா
பல்கலைக்கழக மாணவர்கள், மூன்றாவது நாளாக, உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.