லோக் சபா தேர்தலில், ஐந்து முனைப் போட்டி ஏற்படலாம். அ.தி.மு.க.,வை
போல், தி.மு.க.,வும் தனித்துப் போட்டியிடும் நிலை வரலாம். அதை மனதில்
கொண்டு, தேர்தல் பணியை துவங்குங்கள் என, கட்சியினருக்கு, தி.மு.க., தலைவர்
கருணாநிதி கட்டளையிட்டுள்ளார். அறிவாலயத்தில், கட்சியின் முன்னணி
நிர்வாகிகளுடன், அவர் ஆலோசனை நடத்திய போது, இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.லோக்சபா
தேர்தலுக்கான, கூடடணி உத்திகள் குறித்து, ஒவ்வொரு கட்சியிலும் ஆலோசனை
நடந்து வருகிறது. ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வை பொறுத்தவரையில்,
கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று முடிவு செய்து விட்டது.
டில்லியில் நேற்று, மார்க்சிஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும்,
அ.தி.மு.க., பங்கு கொண்டு, அதை உறுதிப்படுத்தி உள்ளது.பிரதான
எதிர்க்கட்சியான, தி.மு.க., வலுவான கூட்டணியை அமைக்க விரும்பியது. ஏற்கனவே,
தி.மு.க., அணியில், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புதிய தமிழகம்
கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், காங்.,-தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை
இணைத்து, அணியை வலுவடையச் செய்வதற்கான, பேச்சு வார்த்தைகளை, தி.மு.க.,
துவங்கியது. இந்த முயற்சி நடந்து கொண்டிருக்கும் போதே, காங்கிரசும்,
தே.மு.தி.க.,வும் தனியாக பேசி, தங்களுக்கு இடையே ஒரு கூட்டணியை
ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்ட தகவல், தி.மு.க., தலைமைக்கு தெரியவந்தது.