சனி, 12 நவம்பர், 2016

மைக்கல் குன்ஹா கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.
1985ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக தன் பணியை தொடங்கிய குன்ஹா, 2002ஆம் ஆண்டில் நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்று பெல்காம் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். 2004ஆம் ஆண்டில் குன்ஹா, ஹூப்ளி மாவட்ட நீதிபதியாக இருந்தபோது ஹூப்ளி இத்கா மைதான கொடியேற்றிய வழக்கு தொடர்பாக அப்போதைய மத்தியப்பிரதேச முதலைமைச்சர் உமாபாரதிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்தார். இதனால் உமாபாரதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது 2009இல் கார்வா மாவட்ட நீதிபதியாக அமர்த்தப்பட்டார். பின்னர் பெங்களூரு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஆனார்.
அதைத் தொடர்ந்து பெங்களூரு புறநகர் மாவட்ட நீதிபதியாகப் பணி செய்தார். பின்னர் ஊழல் தடுப்புத்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 31 முதல் ஜெயலலிதா மீது உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்த வழக்கின் தீர்ப்பில்தான் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 100 கோடி அபராதமும் விதித்தார் குன்ஹா. இந்நிலையில் கர்நாடகா நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பக்கோரி தலைமை நீதிபதி எஸ்.கே. முகர்ஜி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் ஸ்ரீநிவாஸ் ஹரீஷ்குமார், ஜான் மைக்கேல் குன்ஹா உட்பட ஐந்து பேர் பட்டியலை பரிந்துரைத்தார். இந்த பட்டியலை பரிசீலித்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா உட்பட ஐந்து பேரையும் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். இவர்கள் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: