ஞாயிறு, 15 டிசம்பர், 2019

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

Nivedita Louis. : ஏன் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாம் எதிர்க்க வேண்டும் என்ற தெளிவை இங்கு யாரும் சரியாக தரவில்லையோ என்றே
தோன்றுகிறது. என் ஆர் சி என்ற பதிவேடு மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பிற மதத்தினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானது. ஆண்டாண்டு காலமாக பல தலைமுறைகளாக இந்தியாவில் வாழும் எண்ணற்ற இந்தியர்களை போதுமான குடியுரிமை ஆதாரம் இல்லை என்று சொல்லி ஜெர்மனி செய்தது போல "தடுப்பு முகாம்களில்" அடைக்க இந்த அரசு திட்டம் தீட்டியுள்ளது. 1987 முதல் 2017 வரை இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இஸ்லாமிய இராணுவ அதிகாரி முகம்மது சனாவுல்லா 1971க்கு முன் அவர் குடும்பம் இங்கே வசித்ததற்கான ஆதாரங்களைக் காட்டத் தவறிய காரணத்தால் இப்போது தடுப்பு முகாமில் இருக்கிறார்.நாட்டுக்காக காஷ்மீர் பிரச்னையில் உயிர் கொடுக்கத் துணிந்து குடியரசுத் தலைவரால் பாராட்டப்பட்ட இராணுவ அதிகரிக்கே இந்த நிலை என்றால்... நீங்களும் நானும்?
அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமுல் படுத்திய போது கிட்டத்தட்ட 16 லட்சம் வங்காள இந்துக்கள் எந்த ஆவணமும் இன்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் பங்களாதேஷில் இருந்து இங்கு குடியேறியவர்கள். இஸ்லாமியர்களுக்கு விரித்த வலையில் வந்து விழுந்தவர்கள் அவர்கள். இந்துக்களான அவர்களை உள்ளே சேர்க்கத்தான் இந்த குடியுரிமை திருத்த சட்டம் என்று பலர் கருதுகிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இது போன்ற அண்டை நாடுகளில் இருந்து இங்கே தஞ்சம் புகும் இந்துக்களுக்கு இந்தியா தான் கதவுகளை விரித்து வைக்கிறது. மகிழ்ச்சி தான். ஆனால் அதே சட்டத்தை தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்து அமுல் படுத்தினால், சிறுபான்மையினரை போதிய ஆவணங்கள் இல்லை என்று காரணம் காட்டி தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப முடியும்.
சனாவுல்லாவுக்கு இன்று நடந்திருப்பது நாளை எந்த சிறுபான்மை இன இந்தியருக்கும் நடக்கலாம். தலைமுறை தலைமுறையாக இந்தியாவை தாய்நாடு என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு நம் அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது.
"இந்திய நிலப்பரப்பிற்குள் எவரொருவருக்கும் சட்டத்தின் முன் சம நிலையையோ அல்லது சட்டங்களின் சம பாதுகாப்பையோ அரசு மறுக்கலாகாது" என்று சொல்கிறது அதன் 14 ஆவது உறுப்பு. இந்த விதியைத் தான் தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டங்கள் மீறுகின்றன. மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை தீர்மானிப்பது நம் நாட்டின் மதச் சார்பற்ற பன்முகத்தன்மைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பானது.
இதை சுட்டிக் காட்டியே தன் அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளார் அப்துர் ரகுமான் ஐ. பி. எஸ்.! அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இப்போது வெடித்திருக்கும் போராட்டத்துக்குக் காரணம் வெளியே இருந்து இங்கு வரும் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் குடியுரிமை வாய்ப்பு மட்டுமல்ல, இங்கு உள்ளவர்களுக்கு பறிபோகக் கூடிய உரிமைகளை மீட்டெடுப்பதும் தான். மதச் சார்பின்மை என்ற அடிப்படையில் தான் இந்தியா என்ற நாடு 1947ஆம் ஆண்டு உருவானது. இஸ்லாமிய நாடாக பாகிஸ்தான் தன்னை அறிவித்துக் கொண்டாலும், இந்தியா மதச் சார்பின்மையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இத்தனை ஆண்டுகள் உயிர்ப்புடன் இருந்துவந்துள்ளது. இந்த "யாவரும் ஒன்றே" என்ற நாட்டின் அடிப்படைக் கட்டுமானத்தை தான் பாஜக - ஆர் எஸ் எஸ் துணையுடன் பிடுங்கி வீச நினைக்கிறது. காந்தியும் நேருவும் லட்சக்கணக்காக உயிர்நீத்த விடுதலைப் போராட்ட வீரர்களும் இதற்காகவா இத்தனை போராடினார்கள்? சிந்தியுங்கள்!

கருத்துகள் இல்லை: