ஞாயிறு, 15 டிசம்பர், 2019

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள் ....பெரும் அதிர்ச்சியை..


Samayam Tamil : | தமிழகம் மற்றும் இலங்கை இடையே பிரச்சினைக்குரியதாக இருப்பது கச்சத்தீவு. இதனை இந்திய அரசு எப்போது இலங்கை அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதோ, அப்போது முதலே சர்ச்சை தொடங்கிவிட்டது என்றே கூறலாம். ஆழ்கடல் மீன்பிடிக்கும் சம்பவங்களின் போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டி அடித்து விடுகின்றனர். இதனால் பல்வேறு வகைகளில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் மற்றொரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக இவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டனர். இந்த சூழலில் கச்சதீவு பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்கள் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் தமிழக மீனவர்கள் அச்சத்துடன் இருந்தனர். இன்று அதிகாலை கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது குறுக்கிட்ட இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி படகை நிறுத்துமாறு கூறினர்.
 இதையடுத்து 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். இந்தப் பகுதிக்கு மீண்டும் வந்தால் கைது செய்துவிடுவோம் என்று எச்சரித்து விடுத்து விரட்டி அடித்தனர்.

இந்நிலையில் கரைக்கு திரும்பிய மீனவர்கள் தங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். முன்னதாக வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின் படி, குமரிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காணப்பட்டது.
 
இதனால் கடந்த சில நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து மீன்பிடி தொழிலாளர்கள் இல்லாததால் குறைந்த அளவிலேயே மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

கருத்துகள் இல்லை: