ஞாயிறு, 15 டிசம்பர், 2019

மீண்டும் காங்கிரஸ் தலைவராகும் ராகுல் ? .. வீடியோ


மின்னம்பலம் :  டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) காங்கிரஸ் நடத்திய நாட்டைக் காப்போம் என்ற பிரமாண்டப் பேரணி மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி மீண்டும் தலைவர் ஆவார் என்ற அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன.
இந்தப் பேரணியில் ராகுல் காந்தியின் ஆக்ரோஷமான பேச்சு மட்டுமல்ல, இளைய தலைவர்கள், தொண்டர்கள் அனைவருமே ராகுல் காந்தியை மையப்படுத்தியே முழங்கியிருக்கிறார்கள். எனவே ராகுல் காந்தியை மீண்டும் தலைவர் ஆக்குவதற்கான திட்டமிட்ட ஓர் ஏற்பாடாகவே இந்தப் பேரணியைப் பார்க்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
சோனியா, பிரியங்காவை விட ராகுலுக்குத்தான் அதிக கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், இந்தப் பேரணியில் இளைய தலைவர்களான சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் ராஜீவ் சதவ் ஆகியோர், ‘மோடியை எதிர்த்துப் போராடும் முகமாக காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியே இருக்க வேண்டும்” என்று பேசினார்கள்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், “கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் பொருளாதார மந்தநிலை, வேலையின்மை மற்றும் ரஃபேல் போர் விமானம் போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது போன்ற பிரச்சினைகள் இன்னும் காங்கிரஸ் சொன்னபடிதான் நடந்துகொண்டிருக்கின்றன” என்று கூறினார்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பேசுகையில், “நம் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதை உறுதியளித்தார். நியாய் திட்டத்தையும் அறிவித்தார்.அந்த திட்டங்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.
ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், “ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் நாடு முழுக்க சுற்றுப் பயணம் செல்ல வேண்டும். இதன் மூலம் பாஜகவிடம் இருந்து நாட்டைக் கைப்பற்றிப் புதுப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சதாவ், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான கட்சியின் போராட்டத்திற்கு ராகுல் காந்திதான் முகம். அவரால்தான் மோடியை எதிர்த்துப் போராடி வெல்ல முடியும்” என்று கூறினார்.
இந்தப் பேரணியில் ஆங்கிலத்தில் பேசிய ஒரே ஒருவரான தமிழகத்தின் ப.சிதம்பரம், “இன்று, இந்தியா உலகின் பார்வையில் சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் உடைந்துவிட்டது, இந்தியாவின் அரசியல் உடைந்துவிட்டது, இந்தியாவின் தலைமை முற்றிலும் தோல்வியுற்றது. இந்த சீரழிவுக்க்கெல்லாம் ஒரு நபர் பொறுப்பேற்க வேண்டும் என்றால், நரேந்திர மோடி தான், ”என்றார் சிதம்பரம்.
இதற்கெல்லாம் பிறகுதான் ராகுல் காந்தி, “மன்னிப்பு கேட்பதற்கு என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று ஆக்ரோஷமான பேச்சை வெளிப்படுத்தினார். விரைவில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்பார், பிரியங்கா காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அவருக்கு ஆதரவு திரட்டுவார் என்று மூத்த காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவிக்கிறார்கள்

கருத்துகள் இல்லை: