திங்கள், 16 டிசம்பர், 2019

எஸ்.ஆர் பாலசுப்பிரமணியன் : இந்து ராஷ்டிரத்தை உருவாக்கவே குடியுரிமை சட்டத்திருத்தம்.. பாஜக நிர்பந்தித்து - அதிமுக எம்.பி பரபரப்பு பேட்டி

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குடியுரிமை சட்டத்திருத்தம் - அதிமுக எம்.பி பரபரப்பு பேட்டிtamil.news18.com : ;இந்து ராஷ்டிரத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறது பாஜக அரசு என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர் பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். நாடு முழுவதும் பல நகரங்கள் போராட்ட களமானதற்கு காரணமான மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதாவை, அதிமுக இரு அவைகளிலும் ஆதரித்தது.
அதிமுக இந்த மசோதாவை ஆதரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தாகவேண்டிய நெருக்கடி பாஜகவின் கூட்டணிக்கட்சிகளுக்கு இருந்தது என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தி இந்து>’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது;-;
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தாக வேண்டிய நெருக்கடி பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு இருந்தது. ஆனால் அந்த அழுத்தத்தை பாஜக நேரடியாகத் தரவில்லை. மசோதாவில் முஸ்லீம் என்ற வார்த்தை இடம்பெறாதது நிச்சயம் தவறுதான்.

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த சட்டத் திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால், அந்த வார்த்தையைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு வார்த்தைகளின் வழியே அதனைச் சொல்லியிருக்கிறார்கள்.ஒட்டுமொத்த இந்து சமூகமும் தங்களுடைய வாக்கு வங்கியாக மாறும், அதன் மூலம் இந்திய அரசியலில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று பாஜக தலைவர்கள் நினைக்கிறார்கள்.

எப்போதெல்லாம் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவது, இந்துக்களின் வாக்கு வங்கியைத் தமதாக்குவது என்பன போன்ற காரியங்களைச் செய்வார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அதிமுக ஆதரவளித்திருப்பதால் அதன் சிறுபான்மை வாக்கு வங்கியில் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. ஆனால், சிறு சேதத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், கட்சி அலுவலகத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு வாக்களிப்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். தலைமைச் செயலக துணைச் செயலர் தொலைபேசியில் அழைத்தார். மசோதாவுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்றார். அதனை அடுத்து மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்றும் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: