திங்கள், 16 டிசம்பர், 2019

மாணவர்கள் மீது தாக்குதல்: தமிழகத்தில் வெடித்த போராட்டம்!

மாணவர்கள் மீது தாக்குதல்: தமிழகத்தில் வெடித்த போராட்டம்!மின்னம்பலம் : டெல்லியில் ஜாமியா, அலிகர் பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராகவும் , குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகவும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம்
இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை, கோவை மதுரை, நெல்லை என பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 11.30 மணியளவில் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை. போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
இதுபோன்று மதுரையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன், ”பெண்கள் கழிவறையில் ஆண் காவலர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தும் கொடூரம் அரங்கேறுகிறது என்று மோடி அரசுக்கு எதிராகக் கண்டனம்” தெரிவித்தார். குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறவிட்டால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களை இறக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஆவேசமாகக் கூறினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.
நெல்லை ரயில்நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட மாணவர் அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

சென்னை ஐஐடி
ஐஐடி மாணவர்கள் கலெக்டிவ் அமைப்பினரும் பேரணியை நடத்தினர். கஜேந்திரா சர்க்கிள் அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
லயோலா கல்லூரி
நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மணிநேரம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாமியா பல்கலை மாணவர்களுக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தியும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
புதுச்சேரி மாணவர்கள்
புதுச்சேரி காலாபட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து முதல் கேட் வழியாக வெளியில் வந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் பேரணியாகச் சென்றனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

லக்னோ மற்றும் ஹைதராபாத்
லக்னோவில் உள்ள நட்வா கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது கல்லூரியின் கேட்டை மூடி போலீசார் பூட்டியுள்ளனர். அப்போது போலீசார் மீது கற்களை வீசி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் அணிவகுத்துச் செல்வதைத் தடுக்கவும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. ”சுமார் 150 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சுமார் 30 விநாடிகள் கல் வீச்சும் இருந்தது. இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்கு திரும்பிச் செல்கின்றனர்” என்று லக்னோ காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி தெரிவித்தார்.
ஹைதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் மாணவர்களும் ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர்

கருத்துகள் இல்லை: