சனி, 21 டிசம்பர், 2019

மங்களூரு மருத்துவ மனைக்குள் கண்ணீர் குண்டு வீசிய போலீஸ் வீடியோ .. சி சி டி வி


tamil.oneindia.com/authors/arivalagan. மங்களூரு: போராட்டக்காரர்களை விரட்டி வந்த போலீஸார் மருத்துவமனைக்குள் புகுந்து கண்ணீர்ப் புகைக் குண்டை வீசிய சம்பவம் மங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூரில் புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தால் மங்களூரே ஸ்தம்பித்துதப் போனது. தடியடி, துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு என அல்லோகலப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி அதிர வைத்துள்ளது. அதில் ஒரு மருத்துவமனையில் போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டு வீசும் காட்சி உள்ளது. மங்களூரில் உள்ள ஹைலேன்ட் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சி பதிவாகியுள்ளது. பந்தர் என்ற பகுதியில் போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அதில் அப்துல் ஜலீல், நெளஷின் ஆகியோர் வழியிலேயே புல்லட் காயத்தால் மரணமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் இங்கு கொண்டு வரப்பட்ட தகவல் பரவியதும் இங்கு கூட்டம் கூடி விட்டது. பலர் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் பாதுகாப்பு கேட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது. போலீஸார் விரைந்து வந்தனர். கூட்டத்தைக் கலைக்கவும், சிலரைப் பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்ட போலீஸார், கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சில் இறங்கினர். இதில் மருத்துவமனைக்குள்ளேயே கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் போராட்டக்காரர்கள் கல்வீச்சிலும், தாக்குதலிலும் ஈடுபட்டதால் அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதேசமயம், போலீஸார் மருத்துவமனைக்குள் நுழைந்து வார்டு வார்டாக போராட்டக்காரர்களைத் தேடுவதும், ஐசியு உள்ளிட்ட சிறப்பு வார்டுகளுக்குள்ளும் அவர்கள் புகும் சிசிடிவி காட்சிகளும் அதிர வைப்பதாக உள்ளன.
போலீஸாரின் நடவடிக்கையின்போது மருத்துவமனையில் 60 நோயாளிகள், மருத்துவமனைப் பணியாளர்கள் இருந்தனர். போலீஸாரின் நடவடிக்கையால் பயந்த சில நோயாளிகள் அங்கிருந்து வேகம் வேகமாக வெளியேறியுள்ளனர். அவர்களையும் போராட்டக்காரர்கள் என நினைத்து போலீஸார் துரத்தியதால் மேலும் பதட்டம் அதிகரித்தது.

கருத்துகள் இல்லை: