வியாழன், 19 டிசம்பர், 2019

எங்கள் உரிமை என்ன?: நீதிபதியிடம் கதறி அழுத நிர்பயாவின் தாய்!

எங்கள் உரிமை என்ன?: நீதிபதியிடம் கதறி அழுத நிர்பயாவின் தாய்!மின்னம்பலம் :  நிர்பயா வழக்கில், தூக்குத் தண்டனையை மறுசீராய்வு செய்யக் கோரி குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 18) தள்ளுபடி செய்தது.
தலைநகர் டெல்லியில் 2012ல், மருத்துவ மாணவி நிர்பயா கும்பல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் மீட்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த சம்பவம் நிகழ்ந்து கடந்த டிசம்பர் 16ஆம் தேதியுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தன.
குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் வலுத்தன. இவ்வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மற்ற அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் ராம்சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். அக்‌ஷய குமாரை தவிர மற்ற மூன்று பேரும் தூக்குத் தண்டனைக்கு எதிராக மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அக்‌ஷய்குமார் தூக்குத் தண்டனைக்கு எதிராக மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தூக்குத் தண்டனை என்பது குற்றவாளிகளை கொல்கிறதே தவிரக் குற்றங்களை அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று (டிசம்பர் 17) விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, நிர்பயாவின் தாய் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் அர்ஜுன் பாப்டே தனது உறவினர் என்பதால் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த மனு மீண்டும் இன்று நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், போபண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்‌ஷய் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங், இவ்வழக்கில் அரசியல், ஊடக அழுத்தங்கள் உள்ளன. நியாயமற்ற மற்றும் விசாரணை திறமையின்மை ஆகியவையே இதற்கு வழிவகுத்ததாக அறிக்கை சமர்ப்பித்தார்.
வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் நண்பருக்குத் தவறான ஆதாரங்களை வழங்க வேண்டும் என லட்சக் கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். மேலும் 2013ல் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் குறித்து திகார் முன்னாள் சிறை ஜெயிலர் சுனில் குப்தா தனது குறிப்பில் கூறிய அறிக்கைகளையும் சமர்ப்பித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அசோக் பூஷண், இதுபோன்ற வாதங்களை மறுசீராய்வு வழக்கு விசாரணையின் போது பரிசீலிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்யவுள்ளதால் 3 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதுபோன்ற விவகாரங்களில் கருணைக் காட்டக் கூடாது. குற்றவாளிகள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் தாமதத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். கருணை மனுக்களைத் தாக்கல் செய்வது, அதனைத் திரும்ப பெறுவது என தாமதப்படுத்துகின்றனர். இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். கருணை மனு அளிக்க வேண்டுமானால் ஒரு வாரம் அவகாசம் வழங்கலாம் என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கருணை மனுத் தாக்கல் செய்யக் காலக்கெடு விதிக்கும் விவகாரத்தைத் தவிர்க்கிறோம். சட்டத்தில் என்ன நடைமுறையோ அதனை பின்பற்றலாம் என்று தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனிடையே நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, தீர்ப்பை வரவேற்பதாக மகிழ்ச்சித் தெரிவித்தார்.
மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திகார் சிறைத்துறைக்கு இன்று மாலை உத்தரவிட்டது. அக்டோபர் மாதத்தில் அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் மரண தண்டனை விதிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பதால் புதிய அறிக்கையை தாக்கல் செய்யக் கூடுதல் அமர்வு நீதிபதி சதீஷ் அரோரா உத்தரவு பிறப்பித்தார். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்பயாவின் தாய் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அப்போது, குற்றவாளிகள் கருணை கேட்டு மனுத் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதைக்கேட்டதும் நீதிபதி முன்பே நிர்பயாவின் தாய் கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் தெரிவித்த நீதிபதி, உங்கள் மீது முழு அனுதாபம் உள்ளது. அவர்கள் சாகப்போகிறார்கள் என்பது தெரியும். எனினும் கருணை மனு அளிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. குற்றவாளிகளைத் தூக்கிலிட புதிய அறிவிப்புகளை வழங்க வேண்டிய சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய ஆஷாதேவி, எங்கு சென்றாலும் குற்றவாளிகளின் உரிமைகளைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கிறார்கள். அப்படியானால் எங்கள் உரிமை என்ன? என நீதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்றம் குற்றவாளிகளின் உரிமையைத்தான் பார்க்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை அல்ல. அடுத்த விசாரணையின் போதும் தீர்ப்பு வழங்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்று நம்பிக்கையின்றி பேசினார்

கருத்துகள் இல்லை: