சனி, 21 டிசம்பர், 2019

முரசொலியின் 83 ஆண்டுகளுக்கான மூலப்பத்திரம்: நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திமுக!

ஆணவத்தை பார்க்காமல் டாக்டர் ராமதாஸ் மன்னிப்பு கேட்டல் வழக்கை கைவிட சம்மதம்!
மின்னமபலம் : முரசொலி மூலப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல்
செய்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்ட, அதற்கு திமுக பட்டாவுடன் பதிலளித்திருந்தது. இதனை முன்வைத்து இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்த நிலையில், முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார். இதற்கான விசாரணை நவம்பர் 19ஆம் தேதி நடந்திருந்தது.

முரசொலி இடம் குறித்த தனது ட்விட்டர் பதிவுகளை நீக்கவேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதுபோலவே பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இல்லையென்றால் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளிக்காத நிலையில், ராமதாஸ் மற்றும் சீனிவாசன் மீது சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று (டிசம்பர் 20) விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக வழக்கறிஞர்கள் ஆஜராகினர். முரசொலி ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். இதனையடுத்து, ஜனவரி 24ஆம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முரசொலி மீது அவதூறாக பேசிய டாக்டர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநிலச் செயலாளர் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினோம். இருவரும் பதில் அளிக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தோம். நீதிமன்றத்தில் இன்று அதற்குரிய பிரமாண வாக்குமூலத்தையும், 83 ஆண்டுகளுக்கான விவரங்கள், மூலப்பத்திரம் ஆகியவை முரசொலி அறக்கட்டளை சார்பாக தாக்கல் செய்துள்ளோம். இதன் நகல்கள் இருவருக்கும் அனுப்பப்படும். இருவரும் ஆணவத்தை கைவிட்டு கவுரவம் பார்க்காமல் மன்னிப்பு கோரினால் மு.க.ஸ்டாலின் அனுமதியோடு இந்த வழக்கை வாபஸ் பெறுவோம்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: