வியாழன், 2 டிசம்பர், 2010

காதலியுடன் உடன்கட்டை ஏறிய காதலன்: பஞ்சாபில் துயரம்

பஞ்சாபில் பள்ளி மாணவர் ஒருவர் காதலியுடன் உடன்கட்டை ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நாள் கல்யாணம் மறுநாள் விவாகரத்து என்று போய்க் கொண்டிருக்கும் உலகில் பள்ளி மாணவர் ஒருவர் காதலியுடன் உடன்கட்டை ஏறியுள்ளார்.   இந்த உலகில் தான் ஒன்று சேரமுடியவில்லை மறு உலகிலாவது ஒன்று சேரலாம் என்று நினைத்து செய்துவிட்டார் போலும்.
பஞ்சாப் மாநிலம் சிர்சா மாவட்டத்தில் உள்ள மல்சிங்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்டுசிங் (17). பிளஸ் – 1 படித்து வந்தார். இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த வீர்பால் கவுர் (17) என்ற பிளஸ்-1 மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இவர்கள் காதல் விவகாரம் வீர்பால்கவுர் வீட்டிற்குத் தெரிய வரவே அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தங்கள் மகளையும் கண்டித்துள்ளனர். இனி பிட்டுவுடன் சேரவே முடியாது என்ற முடிவுக்கு வந்த கவுர் தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
பின்னர் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.    உறவினர்கள் சிதைக்கு தீ மூட்டி சடங்குகள் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர். இதற்கிடையே வீர்பால்  கவுரின் மரணம் பற்றி அறிந்த பிட்டு சுடுகாட்டிற்குச் சென்று எரிந்து கொண்டிருந்த சிதையில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இன்றைய உலகில் இப்படியும் ஒரு காதலன்.

கருத்துகள் இல்லை: