வெள்ளி, 3 டிசம்பர், 2010

அகழாய்வு.பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் அகழாய்வு செய்திட வல்லுநர் குழு நியமனம்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்தபடி கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் அகழாய்வு செய்திட வல்லுநர் குழுவை நியமித்து, முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்கள் எல்லாம் மகிழ கோவை மாநகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்திடத் தேவையான திட்டம் வகுத்துச் செயல்படுத்திட வேண்டுமென்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும்வகையில் கடல்கொண்ட பூம்புகார் குறித்த ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தமிழக அரசின் தொல்லியல் துறையும், குமரிக் கண்டம் குறித்த அகழ்வாராய்ச்சியைத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொல்லியல் துறையும் மேற்கொள்ளலாம் என்றும்;
இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது என்றும், தமிழக அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளர் அக்குழுவின் தலைவராகவும், கோவாவில் உள்ள தேசிய கடல்சார் கழகத்தின் தலைவர், சென்னை தேசிய கடல்வள தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அல்லது விஞ்ஞானி பா. சசிசேகரன், சென்னையில் உள்ள
மத்திய தொல்லியல்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் அல்லது அவரது பிரதிநிதி தொல்லியல்துறையின் ஓய்வுபெற்ற இயக்குநர் நடனகாசிநாதன் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தொல்லியல்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்படுகின்றனர் என்றும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: