வெள்ளி, 28 ஜூன், 2019

கராத்தே நீக்கம்: ப.சிதம்பரத்துக்கு டார்கெட்டா?

கராத்தே நீக்கம்: ப.சிதம்பரத்துக்கு டார்கெட்டா?தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான கராத்தே தியாகராஜன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது, காங்கிரசுக்குள் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஜூன் 27) மதியம் கராத்தே இடை நீக்க அறிவிப்பு வந்திருந்தாலும் இதற்கான திட்டம் சில நாட்களாகவே நடந்தது என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம் பேசியிருக்கிறார். அப்போதே கராத்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி வழியாக திமுக அழுத்தம் தருவதாக கூறியுள்ளார். அதற்கு அழகிரி, நான் கராத்தேவை விளக்கம் கொடுக்கச் சொல்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

இதன் பிறகே அழகிரி ப.சிதம்பரத்திடம் பேசியுள்ளார். அதன் பின் ப.சி. சொல்லி கராத்தேவும் விளக்கம் கொடுத்துவிட்டார். ஆனாலும் கராத்தேவை நீக்கியிருக்கிறார்கள். கராத்தேவை சஸ்பெண்ட் செய்யும் விஷயம் தனக்கே தெரியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ், அழகிரி ப.சியிடம் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.
இன்னொருபக்கம் இது தமிழக காங்கிரஸ் விவகாரம் என்ற நிலை மாறி காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவில் பிரச்சினையாகியிருக்கிறது. கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரை அவர் விளக்கம் கொடுத்த பிறகும் கூட இடை நீக்கம் செய்திருக்கிறார்கள்.
இது சிதம்பரத்துக்கான கௌரவக் குறைச்சல் என்ற ரீதியிலேயே டெல்லியில் பேசுகிறார்கள். தேர்தல் முடிவுக்குப் பின் காங்கிரஸ் படு தோல்வி அடைந்த மாநிலங்களிலேயே நிர்வாகிகள் நீக்கப்படாத நிலையில், வெற்றிபெற்ற மாநிலமான தமிழகத்தில் அதுவும் சிதம்பரத்தின் தீவிர ஆதர்வாளர் திடீரென நீக்கப்படுவது ஏன் என்ற விவாதம் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் ப.சிதம்பரம் இன்று சென்னை வருகிறார். அவரை சந்தித்துப் பேசிவிட்டு கராத்தே சில அதிரடிகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: