வெள்ளி, 28 ஜூன், 2019

முழு இந்தியாவுக்கும் ஒரே ரேஷன் கார்டு. தென்மாநிலங்களை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டும் பாஜக .

 ஆழி செந்தில்நாதன்  : ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' - மத்திய அரசின்
நோக்கம் என்ன?
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்பது வட இந்தியாவிலிருந்து இந்தியாவின் பிற பகுதிக்கு புலம்பெயர்பவர்களுக்கான திட்டம். நிரந்தரமாக இந்திக்காரர்களை எல்லா மாநிலங்களிலும் குடியிருக்கவைக்கும் செட்லர் காலனியாக்கத் (Settler colonialism) திட்டம்.
இந்திப் பிரதேசங்களில் வளர்ச்சியைக் கொண்டுவந்து, அவரவர்
மாநிலங்களை வளர்ப்பதை விட்டுவிட்டு பிற மாநிலங்களைச் சுரண்டிக்கொழுப்பதற்காகவும் தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் குடியேறி அதன் வசதிகளைக் கொள்ளையடிக்கவும் அவற்றின் மக்கள் தொகை சார்ந்த இயல்பை மாற்றவுமே இது திட்டமிடப்படுகிறது. இது ஒரு டெமாகிராபிக்கல் பிராடு.
தமிழர்களின் தாயகம் தமிழர்களின் தாயகமாக நீடிக்கவேண்டுமென்றால் இது போன்ற நாசகாரத் திட்டங்களை நாம் எதிர்க்கவேண்டும்.
நமது தாயகத்தில் மற்றவர்கள் நுழையக்கூடாது இதற்கு அர்த்தமில்லை. ஆனால் யார் நுழையலாம், எவ்வளவு பேர் நுழையலாம் என்பதை நாம் தீர்மானிக்கும் நிலை இருக்குமானால் அது வேறாகும். கட்டுப்பாடற்ற குடியேற்றம் என்பது இயல்பு மீறியது.
இது புது தில்லி திட்டமிட்டிருக்கும் தாயக அழிப்புக்கொள்கை. எல்லா ஏகாதிபத்தியங்களும் பல சமயங்களில் இப்படித்தான் திட்டமிட்டிருக்கின்றன. இன்றும் இதற்கு பல உதாரணங்கள் உண்டு. இவை அனைத்துமே திட்டமிட்ட இனவழிப்புக்கான செயல்பாடுகளாகும்.

தயவுசெய்து யாரும் சர்வதேசியவாதத்தையும் பரந்த மனப்பான்மையையும் தூக்கிக்கொண்டு இங்கே வராதீர்கள். அது ஏற்கனவே எங்களிடம் எக்கச்சக்கமாக இருக்கிறது!
தனக்கு மிஞ்சிதான் தானமும் தருமமும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.
மக்கள் புலம்பெயர்வது இயற்கையானதே. ஆனால் அதற்கு பின்னால் உள்ள காரணங்ளையும் யோசிக்கவேண்டும்.
ஒரு சில சதவீத மக்கள் எப்போதுமே புலப்பெயர்ச்சியினூடாக வந்து செல்வதை ஏற்போம். அது அனைவருக்கும் பொதுவானது. சில குறிப்பிட்ட தொழிற்துறைகளில் ஆள் பற்றாக்குறை ஏற்படும்போது தற்காலிகமாக குடிபெயர்ச்சியை அனுமதிப்பது என்பதுதான் வேலைசார்ந்த புலப்பெயர்ச்சியின் அடிப்படை. அதை வேலை அனுமதி (work permit) திட்டத்தின் கீழ் ஏற்கலாம். ஆனால் அதற்கான உரிமைகளும் அதிகாரமும் மாநில அரசுகளிடம் இருக்கவேண்டும்.
மோடி அரசு திட்டமிட்டிருக்கும், கடந்த சில ஆண்டுகளாகவே நடைமுறையிலிருக்கும் "இந்திக்காரர்களை இந்தி பேசாத மாநிலங்களில் குடிபெயரவைக்கும் திட்டம்" என்பது திட்டமிட்ட சதியாகும். குஜராத் மாநிலம் கூட ஏற்றுக்கொள்ள மறுத்து அங்கே இந்திக்கார்களுக்கு எதிராக பிரச்சினை வெடித்ததை மறந்துவிடவேண்டாம்.
மாநிலங்களின் அனுமதியோடு குடிபெயரும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவது அந்தந்த மாநிலங்களின் கடமையாகும். புலம்பெயரும் தொழிலாளர்களின் நலனைக் காப்பது என்பதில் எந்த சமரசமும் இல்லை. புலம் பெயரும் தொழிலாளர்களைச் சுரண்டும் உள்ளூர் கொள்ளைக்காரர்களை நாம் எதிர்க்கிறோம். புலம்பெயர்தலின் வலியை தமிழர்களை விட வேறு யாரால் அதிகம் உணரமுடியும்?
ஆனால் மைய அரசு வேலைகள் அனைத்தும் இந்திக்காரர்களுக்கே என்பது தொடங்கி மோடி அரசு செய்துவரும் ஒற்றையாட்சிச் செயல்பாடுகள் வெறுமனே வட நாட்டு பாமர மக்களின் நலன்களுக்கானது அல்ல.
அது இந்தி பேசாத மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பிறப்பு வீதக் குறைவு நிலையை சாதகமாக ஆக்கிக்கொண்டு அவற்றையும் இந்திக்கார மாநிலங்களாக ஆக்க நினைக்கிற "அகண்ட இந்திஸ்தான்" திட்டமாகும்.
மேற்கு வங்கம், பஞ்சாப், அசாம், மகாராஷ்ட்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் நெடுங்காலமாக இந்தச் சிக்கலால் அவதியுறுகின்றன. அங்கே இவை சமூகப் பிரச்சினைகளாக அவ்வப்போது வெடிக்கின்றன.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளாக இதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கர்நாடகம் கொஞ்சம் விழித்துக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்பியான தேஜஸ்வி சூர்யா கூட கர்நாடகத்திலுள்ள வங்கிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று பேசினார். கர்நாடகத்தில் இந்தி பேசும் மக்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் வெளிப்பாடகவே சில ஆண்டுகளாக அங்கே இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்துவருகிறது.
பார்ப்பன அரசியல் - சமூக ஆதிக்கம், பனியா பொருளாதார ஆதிக்கம், அதற்கு அடித்தளமாக இந்தி பேரினவாத ஆதிக்கம் - இதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் வியூகம். இதை நாம் பார்க்க மறந்துவிடக்கூடாது.
திட்டமிடப்பட்ட, அரசியல் நோக்கத்திலான புலப்பெயர்ச்சிகளை ஏற்றுக்கொண்டால் இலங்கையிலும் பாலஸ்தீனத்திலும் நடந்தது எல்லாம் இங்கும் நடக்கும் என்பதை மறக்காதீர்கள்.
சாரி, இனி வந்தாரை "எல்லாம்" வாழவைக்க நாங்கள் விரும்பவில்லை.
- ஆழி செந்தில்நாதன்

கருத்துகள் இல்லை: