சனி, 29 ஜூன், 2019

எந்த சொத்தையும் நான் அபகரித்தது இல்லை: கோபண்ணா பேட்டி

karate thiagarajan நக்கீரன் : தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன், அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்த அவர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். இதுகுறித்து டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கோபண்ணா, சென்னையில் ராகுல்காந்தி பத்திரிகையாளர் சந்திப்பில், அதன் பாஸ்களை 50 ஆயிரம், லட்சத்துக்கு விற்றதாக சொல்கிறார்.
அந்த மாதிரியே விற்றால் யார் அதனை வாங்க முன்வந்தார்கள் என்று தெரியவில்லை. அதனை கராத்தே தியாகராஜன்தான் விளக்க வேண்டும்.
அதேபோல் அறக்கட்டளை சொத்துக்களை நான் அபகரித்தாக சொல்கிறார். அறக்கட்டளையில் உள்ள இடத்தில் நான் நடத்துகிற தொழிலுக்கு ரெண்டல் அக்கிரிமெண்ட் போடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் நான் தொழில் செய்கிறேன். எந்த சொத்தையும், எந்த காலத்திலும் நான் அபகரித்தது இல்லை. என் நேர்மைக்கு சான்றாக காமராஜ் ஒரு சகாப்தம் என்கிற ஒரு நூலை, ஒரு அரிய பொக்கிஷத்தை பெருந்தலைவர் காமராஜருக்காக வெளியிட்டேன். ஐந்து பதிப்புகளை நான் வெளியிட்டு விற்றிருக்கிறேன். அந்த அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் ஆட்சி காலத்தில் காமராஜ் என்ற விருதினை எனக்கு வழங்கியிருக்கிறார். இதைவிட நேர்மைக்கு வேறு சான்று தேவையில்லை.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறிய அவதூறு குற்றச்சாட்டுக்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் அவர்களை சந்தித்து விவரமாக நான் கூறுவேன். இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை: