செவ்வாய், 25 ஜூன், 2019

ஊழல்மிகு அ.தி.மு.க அரசு' - தயாநிதி மாறன் குற்றச்சாட்டுக்கு மக்களவையில் பா.ஜ.க எம்.பி-க்கள் கொந்தளிப்பு


vikatan.com - ராம் பிரசாத் : தமிழகத்தை ஆட்சி செய்யும் அ.தி.மு.க அரசு, ‘ஊழல் அரசு’என மக்களவையில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேசியதற்கு, பா.ஜ.க எம்.பி-க்கள் அதிருப்தியைப் பதிவுசெய்தனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, தேவையில்லாமல் மாநில அரசின் செயல்பாடுகளை விமர்சித்துவருகிறார் என  பா.ஜ.க எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையின் தீர்மானத்தின்மீது பேசிய தயாநிதி மாறன், ``புவி வெப்பமயமாதல் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தற்போது தண்ணீர்ப் பிரச்னை நிலவுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு, இதுபோன்ற நிலை இருந்தபோது, கருணாநிதி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்றார். தி.மு.க ஆட்சிக்கு வந்தததும், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு இதற்காக ரூ.1000 கோடியை வழங்கியது. பா.ஜ.க-வின் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க அரசு, தமிழகத்தில் எதுவும் செய்யவில்லை.  
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்காக அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 8 வருடங்களாக, தமிழகத்தில்  ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க அரசு, சரியான திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது. ஊழல் ஒழிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி பேசினார்.  ஒரு மோசமான ஊழல் மிகுந்த அரசு தமிழகத்தில் செயல்பட்டுவருகிறது. தமிழக மக்களின் நலனுக்காக அவர்கள் செயல்படவில்லை. 2014-ல் பணபலத்தால் அ.தி.மு.க வெற்றிப்பெற்றது. தமிழகத்தில் தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்தது'' என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி-க்கள், தயாநிதி மாறன் தேவையில்லாததைப் பேசுகிறார். தமிழக அரசுமீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அரசு ஊழல் மிகுந்த அரசு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  ‘ஊழல்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்த அனுமதிக்க முடியாது' என்று கூறினர்.

பா.ஜ.க எம்.பி ராஜீவ் பிரதாப் ரூடி பேசுகையில், ``தயாநிதி மாறன் தேவையில்லாமல் பேசுகிறார். ஒரு மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி-யை மட்டும் இவ்வளவு நேரம் பேச ஏன் அனுமதி அளிக்கிறீர்கள்?. அவரும் ஒரு குறிப்பிட்ட கட்சியைத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார்'' என்று கேள்வி எழுப்பினார்

கருத்துகள் இல்லை: