செவ்வாய், 25 ஜூன், 2019

சுருக்குமடி வலையை கண்டு கொள்ளாத அதிகாரிகள்...பறிபோனது மீனவன் உயிர்..!"

fnakkheeran.in - நாகேந்திரன் : தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், இவற்றை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று, அரசாங்கம் எச்சரித்தாலும் மீனவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை. அதிகாரிகளும் பெரிதாக இதனை எடுத்துக் கொள்வதில்லை. இதனால், இன்று ஒரு மீனவனின் உயிர் பறிபோனது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த சந்திஸ்டன், முனியசாமி, முத்து, எட்டுராஜா, சண்முகவேல், அரசு, பிரசாத், ராமன் ஆகிய 8 பேர் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் ஆழ் கடலில் சங்கு குளிப்பதற்காகச் சென்றனர். இவர்கள் கடலில் மூழ்கி சங்கு எடுக்கும்போது, அந்த வழியாக தாமஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வந்துள்ளது. விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலையை இழுத்து வந்ததால், வலைக்குள் மீனவர் சந்திஸ்டன் சிக்கிக் கொண்டார்.  இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்குக்குளி மீனவர்கள் சந்திஸ்டனை காப்பாற்றுவதற்காக கூக்குரலிட்டனர். மேலும் விசைப்படகின் சுருக்குமடி வலையை மேலே தூக்குமாறும் அவர்கள் சத்தமிட்டுள்ளனர். அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதை உணர்ந்த விசைப்படகு மீனவர்கள், உடனடியாக வலைகளை அறுத்துவிட்டு கரைக்கு திரும்பி விட்டனர்.

இதற்கிடையே, சுருக்குமடி வலைக்குள் சிக்கிய சந்திஸ்டன் வெளிவர முடியாமல் ஆழ்கடலுக்குள் மூழ்கினார். அவரை சக மீனவர்கள் பல மணி நேரம் தேடியும் மீட்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து கரை திரும்பிய நாட்டுப்படகு மீனவர்கள், இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, விசைப்படகு உரிமையாளர் தாமஸ் உள்ளிட்ட 8 பேரை பிடித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான சந்திஸ்டனை கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.

சுருக்குமடி வலை மீன்வளத்தை மட்டுமல்ல.. மீனவனையும் அழிக்கும். இதை மீனவர்கள் உணர வேண்டும்.

கருத்துகள் இல்லை: