வியாழன், 27 ஜூன், 2019

தவிர்க்க வேண்டிய சொற்கள்

தவிர்க்க வேண்டிய சொற்கள்மின்னம்பலம் : ஒரு சொல் கேளீரோ! – 24: அரவிந்தன் :
சில சொற்கள் மொழி அடிப்படையில் சரி, தவறு என்பதைத் தாண்டி, சமூகவியல், அரசியல், மனித உணர்வுகள், பொது நீதி, மனித உரிமை, மொழியின் இயல்பு ஆகியவற்றின் அடிப்படையில் தவிர்க்க வேண்டியவை. அவற்றை இப்போது பார்க்கலாம்:
கற்பழிப்பு – அகராதியிலிருந்தே அகற்றப்பட வேண்டிய சொல் இது. பெண்களின் தூய்மையை, ஒழுக்கத்தை, அவர்கள் உடலை வைத்து மதிப்பிடும் சொல் இது. பலவந்தமான உறவுக்கு ஆளாக்கப்படும் பெண்ணுக்கு அந்த உறவில் எந்தப் பங்கும் இல்லை. அத்தகைய உறவால் அவள் உடலும் மனமும் பாதிக்கப்படுகிறதே அன்றி, கற்பொழுக்கம் எனச் சொல்லப்படும் நெறி பாதிக்கப்படுவதில்லை.
கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டது. இரு பாலருக்கும் பொதுவானது. பெண்ணுக்கு மட்டும் கற்பை வலியுறுத்துவது ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ மதிப்பீடு சார்ந்த பார்வை. எனவே பிற்போக்குத்தனமான இந்தச் சொல்லை அடியோடு தவிர்க்க வேண்டும். Rape என்னும் ஆங்கிலச் சொல்லில் ஒழுக்கம் தொடர்பான பொருள் எதுவும் இல்லை.
Rape என்பதற்குப் பாலியல் வன்புணர்வு, பாலியல் வல்லுறவு ஆகிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
Sexual violence தொடர்பான சில சொற்களைப் பார்க்கலாம்.

Sexual abuse / exesess - பாலியல் அத்துமீறல் / வரம்பு மீறல்
Sexual violence - பாலியல் வன்முறை
Sexual harassment - பாலியல் துன்புறுத்தல்
பெண்ணைக் குறிப்பிடப் பெட்டை என்னும் சொல் வழக்கத்தில் இருந்தது. இந்தச் சொல்லில் தன்னளவில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அது பெண்களை, பெண் தன்மையை இழிவாகக் கூறுவதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுவந்ததால் காலப்போக்கில் இழிசொல்லாகவே ஆகிவிட்டது. எனவே, தற்காலத் தமிழில் அது பயன்படுத்தப்படுவதில்லை. எனவே அந்தச் சொல்லைத் தவிர்த்துவிட வேண்டும். பெட்டைக் கோழி என்று எழுதலாம். மனித இனத்தில் பெண்களைக் குறிப்பிட இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
அதுபோலவே பேடி என்னும் சொல் பெண் தன்மை கொண்ட ஆணைக் குறிக்கப் பயன்பட்டது. கோழைத்தனம் என்னும் பொருளிலும் இது புழங்கிவந்தது. இன்னும்கூடச் சிலர் கோழைத்தனத்தைக் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இது பெண்களை, பெண் தன்மையைக் கோழைத்தனத்தோடு இணைத்துப் பேசி இழிவுபடுத்தும் சொல் என்பதால் இதைத் தவிர்க்க வேண்டும்.
விபச்சாரம், விபச்சாரி என்னும் சொற்களைத் தவிர்த்துவிட வேண்டும். பதிலாக, பாலியல் தொழில், பாலியல் தொழிலாளி என்னும் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
சாதி அடையாளம், தொழில் சார்ந்த இழிவான பொருள் ஆகியவை கொண்ட சொற்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
தோட்டி, குயவன், ஆச்சாரி என்பவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பதிலாக, துப்புரவுத் தொழிலாளி, பானை வனைபவர், தச்சர் என்னும் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
கள்ளக் காதல், கள்ளக் காதலி, கள்ளக் காதல் ஆகிய சொற்களைத் தவிர்த்துவிடலாம். மண உறவுக்கு வெளியே உள்ள உறவுகளைக் குறிக்கும் இந்தச் சொல் காதல் என்னும் உணர்வைக் கொச்சைப்படுத்துகிறது. ஆங்கிலத்தில் இது Extra marital affair எனக் குறிப்பிடப்படுகிறது. தமிழிலும் மண உறவுக்கு வெளியேயான உறவு / மண உறவைத் தாண்டிய காதல் எனக் குறிப்பிடலாம்.
தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிட ஹரிஜன் / அரிஜன் என்னும் சொல்லைப் பயன்படுத்துவது தற்காலத்திற்கு ஏற்புடையதல்ல. 60-70 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்புடையதாக இருந்த இந்தச் சொல் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாற்றாக, தலித் என்னும் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
உறவு முறைச் சொற்கள்
இளைய சகோதரன், மூத்த சகோதரி என்றெல்லாம் எழுதும் பழக்கம் தற்போது பரவலாகிவருகிறது. அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, தமக்கை என்று தமிழில் சொற்கள் இருக்கையில் Younger borther, elder sister என ஆங்கில வடிவங்களை அப்படியே மொழிபெயர்ப்பது மிகவும் தவறான நடைமுறை. இதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
அதுபோலவே water falls என்பதைத் தமிழில் நீர் வீழ்ச்சி என்று எழுதுவதும் தவறு. அருவி என்னும் அழகான சொல் தமிழில் இருக்கையில் water falls என்பதை மொழிபெயர்த்து நீர் வீழ்ச்சி என்று எழுதுவது தவறு.
உறவு முறையும் சாதியும்
உறவு முறைகளைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உள்ளன. இவற்றில் சாதி வழக்குகளைத் தவிர்த்துவிட வேண்டும். புனைவுகளில் பாத்திரத்தின் பின்புலத்தையும் தன்மையையும் உணர்த்த இத்தகைய சொற்கள் தேவைப்படலாம். உரையாடல்களிலும் இவை இடம்பெறலாம். ஆனால், செய்திக் கட்டுரைகளில் இவற்றைத் தவிர்ப்பதே நல்லது.
உதாரணமாக, அம்மாஞ்சி என்னும் சொல்லைக் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமே பயன்படுத்துவார்கள். அம்மான் சேய் என்னும் சொல்லின் மருவூ இது. அம்மான் என்றால் தாய்மாமன். எனவே மாமன் மகன் அல்லது மகள் எனக் குறிப்பிடலாம்.
அப்பா என்பதற்குப் பதில் அய்யா என்று சில பிரிவினர் சொல்வார்கள். இதைத் தவிர்த்து அப்பா, தந்தை என்று குறிப்பிடுவதே பொது மொழிக்கு இசைவானது.
நாத்தனார், மாமனார், மாமியார், அண்ணி, மச்சினர், மச்சினி, கொழுந்தன், ஓர்ப்படி எனப் பல சொற்கள் பொதுவானவை. மன்னி, ஆயா முதலான சில சொற்கள் குறிப்பிட்ட சில பிரிவினர் மத்தியில் மட்டுமே புழங்குபவை.
அதுபோலவே ஓரகத்தி, ஷட்டகர் ஆகிய சொற்களும். இவற்றைத் தவிர்த்துவிட்டு, ஓர்ப்படி, சகலை போன்ற பொதுச் சொற்களையே பயன்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை: