வியாழன், 27 ஜூன், 2019

நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் மீது கண் வைக்கும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் மீது  கண் வைக்கும் எடப்பாடிமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியது.
“தமிழக சட்டமன்றம் நாளை கூட இருக்கிறது. மக்களவை, மினி சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கூடும் சட்டமன்றம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்ததாக மாறியிருக்கிறது இந்த சட்டமன்றம். அதுமட்டுமல்ல, சபாநாயகர் தனபால் மீது எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில்தான் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. இதனால் சட்டமன்றக் கூட்டத் தொடரை தமிழ்நாடே எதிர்நோக்கியிருக்கிறது.
ஏற்கனவே, சட்டமன்றத்தின் அலுவல்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், ‘சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதிக்கான பட்டியலில் எடுத்துக்கொள்ளப்படும்’ என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம் சபாநாயகர் மீதான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக சட்டமன்றத்தில் முழு வீரியத்துடன் வலியுறுத்துமா அல்லது அழுத்தம் கொடுக்காமல் அப்படியே விட்டுவிடுமா என்ற கேள்விக்குறி இப்போது திமுகவினர் மத்தியிலேயே எழுந்திருக்கிறது.

அதிமுகவில் இருந்து சில எம்.எம்.எல்.ஏ.க்களை திமுக பக்கம் கொண்டுவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்த நிலையில்தான், சபாநாயகர் மீது வேகமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது திமுக. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ஏப்ரல் 30 ஆம் தேதி மாலையே சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் அளித்தார். இவ்வளவு வேகமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொடுத்த திமுக, அந்த வேகத்தை இப்போதும் காட்டுகிறதா என்று திமுகவில் விசாரித்தால், உதட்டைப் பிதுக்குகிறார்கள்.
ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நம் பக்கம் வரத் தயாராக இருக்கிறார்கள் என்று சீனியர் மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினிடம் சொன்னபோது, ‘சுனிலும், செந்தில்பாலாஜியும் பாத்துப்பாங்க’ என்று அவர்களிடம் ஸ்டாலின் கூறிவிட்டார். அதன் பிறகு மாசெக்கள் இந்த ஆபரேஷனில் இருந்து ஒதுங்கிக் கொள்ள செந்தில்பாலாஜியும் சுனிலும் தொடர்ந்தனர். அதிலும் ஒரு தேக்கம் ஏற்பட்டது. காரணம், திமுக பக்கம் வரத் தயாராக இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துதான். இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதாக இருந்தால் அதற்குத் தேவையான உதவியைச் செய்கிறேன் என்று ஸ்டாலினுக்கு ஒரு பிசினஸ் மேக்னட் வாக்குறுதி கொடுத்திருந்தாராம். ஆனால், இந்த ஆபரேஷனின் போது ஸ்டாலின் தரப்பில் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார்கள். அவர் திமுகவின் தொடர்பு எல்லைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள்.
இதற்கிடையே, ‘திமுகவில் உள்ள வசதியானவர்களே இதற்கான செலவை ஏற்றுக் கொள்ளலாமே?’ என்று ஸ்டாலின் மருமகன் சபரீசன் சொல்லியிருக்கிறார். யாரைச் சேர வேண்டும் இந்த கருத்தை சபரீசன் கூறினாரோ அவர்களுக்கு இந்தத் தகவல் சென்றடைந்தது. பதிலுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘முக்கியமான இந்த ஆபரேஷனுக்கான செலவை கட்சித் தலைமையே ஏற்றுக் கொள்ளலாமே?’ என்றிருக்கிறார்கள் அவர்கள்.
இப்படியாக யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வது என்று திமுகவில் விவாதித்துக் கொண்டே இருக்க, சட்டமன்றக் கூட்டத் தொடர் கூடும் நாளும் நெருங்கிவிட்டது. இதற்கிடையே ராஜ்யசபா தேர்தல் முடியும் வரை நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றி வலியுறுத்த வேண்டாம் என ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதும் மின்னம்பலத்தில் வெளிவந்திருக்கிறது.
திமுகவில் நடக்கும் இத்தனை மூவ்களையும் அறிந்தே வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி, ஏற்கனவே சட்ட ஆலோசகர்கள், மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற அலுவலர்கள் என பலரிடமும் பேசிவிட்டார். அதன்படி, திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அழுத்தமாக முன்னெடுக்காது என்ற தகவலேமுதல்வருக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
அதேநேரம், திமுக தரப்பில் இப்போது இல்லையென்றாலும் பிறகு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்யலாம் என்று கருதும் முதல்வர் எடப்பாடி திமுகவே எதிர்பாராத விதமாக இன்னொரு அதிரடிக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
தமிழக சட்டமன்றத்தில் இப்போது காங்கிரசுக்கு 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 8 பேரில் வசந்தகுமார் குமரியில் எம்.பி.யாக ஜெயித்ததால் நாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதையும் இப்போது திமுகவே கேட்கிறது. இந்நிலையில் இந்த ஆட்சிக்கு பாதுகாப்பு வேண்டி நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் அதிமுகவில் இருந்து முதல்வரே பேசியிருக்கிறார் என்கிறார்கள். இந்த ஆட்சி நீடிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களிடம் எடப்பாடி வலியுறுத்தியிருக்கிறார் என்று அதிமுகவில் சொல்கிறார்கள்.
திமுகவுக்கும் காங்கிரஸுக்குமான கூட்டணியில் எந்த பிளவுமில்லை என்றாலும் இரு கட்சிகளின் நிர்வாகிகளுக்கு இடையிலான உறவு சுமுகமாக இருக்கிறது என்ற நிலைமை இப்போது இல்லை. இந்நிலையில் திமுக ஒரு வேளை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் உறுதியாக இருந்தால்,காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏழுபேரில் நால்வர் சபாநாயகரை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அதிமுக தரப்பில்” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.

கருத்துகள் இல்லை: