
சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, வளசரவாக்கம், அண்ணாநகர் கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த அரை மணி நேரமாக கொட்டி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. திம்மாவரம், பாலூர், சிங்கப்பெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டங்குளத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்குகிறது.
பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதுமே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இந்நிலையில் சென்னையில் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அல்லாடி வருவது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான கொடும் வறட்சி இது என்று விவரறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் முதலே சென்னையின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அவப்போது எட்டி பார்த்து வந்தது. வெப்ப சலனம் காரணமாகவே கடந்த சில நாட்களாக சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது.
இந்நிலையில் தற்போது தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் தலைநகர் சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பல பகுதிகளில் மழை லேசானது முதல் பலமாக கொட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை முதல் சென்னைக்கு இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை இருக்கும் என வானிலை மையம் கூறியிருந்தது அம்மையம் கூறியபடியே சென்னையின் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருவது மக்களது மனங்களை குளிர்வித்து உற்சாகப்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக