வியாழன், 9 செப்டம்பர், 2010

Ranil,இடதுபக்கம் சமிக்ஞை போட்டு வலதுபக்கம் பயணிக்கும் போக்கினைக் கொண்டவர்

ரணில் விக்கிரமசிங்க
இடதுபக்கம் சமிக்ஞை போட்டு வலதுபக்கம் பயணிக்கும் போக்கினைக் கொண்டவர்.
மக்களின் மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன நேற்று (08) பாராளும ன்றத்தில் தெரிவித்தார். அரசியலமை ப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொள்ளாமல் வெளி நடப்புச் செய்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத் திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாகவும் அவ்வாறென்றால் தாம் நேரடியாக ஆதரவளிப்பதில் என்ன தவறிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
18 ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட லக்ஷ்மன் செனவிரட்ன, ஐக்கிய தேசிய கட்சி அதன் தலைவர் மீது அதீத நம்பிக்கை வைத்து அழிவைத் தேடிக்கொண்டது என்றார்.
18 ஆவது திருத்தத்தை எதிர்த்து ஐ. தே. க. வெளிநடப்புச் செய்துள்ள போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன தலைமையிலான ஏழு உறுப்பினர்கள் நேற்று சபையில் அமர்ந்திருந்தனர்.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய செனவிரட்ன எம்.பி., மக்களின் நலனைச் சிந்தித்தே நான் இந்த முடிவை எடுத்தேன். தலைவர் ஒருவர் இல்லாமல் எந்த அமைப்பும் உருப்படாது. அதிபர் இல்லாத பாடசாலை, தலைவர் இல்லாத கட்சி எதுவும் சரிவரப் போவதில்லை. தலைவர்கள் அதிகம் இருந்தாலும் சிக்கல்தான் ஏற்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனை இடதுபக்கம் சமிக்ஞை போட்டு வலதுபக்கம் பயணிக்கும் போக்கினைக் கொண்டவர். ஜனாதிபதியுடன் அவர் எதனைப் பேசி இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாரோ தெரியவில்லை.
விவாதத்திலிருந்து விலகியது எமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் மறைமுகமாக அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகிறார். அதனால் நாம் வெளிப்படையாகவே ஆதரிக்கின்றோம்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தால், அவரும் இந்தத் திருத்தத்தை நிச்சயம் மேற்கொண்டிருப்பார். அவரது தனிப்பட்ட பிழையான முடிவுகளால் கட்சி அழிந்துவிட்டது. இந்தத் திருத்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.
போர் நிறுத்த உடன்படிக்கையை ரகசியமாக செய்த எமக்கு இன்று அவ்வாறு கேள்வி எழுப்ப எந்த அருகதையும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்தால் மட்டும்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறை வெல்ல முடியும். இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்க வெல்லமுடியும். இதனை எல்லாம் அவருக்குச் சொல்லிப் புரியப் போவதில்லைஎன்றார்.

கருத்துகள் இல்லை: