சனி, 11 செப்டம்பர், 2010

காதலுக்கு எதிர்ப்பு; இளம் ஜோடி தற்கொலை

காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மனம் உடைந்த காதலி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். காதலி இறந்த துக்கத்தில் காதலனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் மேலத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (23), ஐ.டி.ஐ. படித்து வந்தார். வன்னிக்கோனேந்தல் கிழக்கு தெருவை சேர்ந்தவர், கருப்பன். அவருடைய 2 வது மகள் கலா (22). கோவையில் உள்ள ஒரு மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

மணிகண்டனும், கலாவும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஏற்கனவே இவர்கள் இருவரும் அறிமுகம் ஆனவர்கள். அவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். நாளடைவில் இந்தச் சந்திப்பு காதலாக மாறியது.

இந்த காதல் விவகாரம் மணிகண்டன் வீட்டுக்கு தெரிந்துவிட்டது. பெற்றோர்கள் அவரை கண்டித்தனர். இதுபற்றி அவருடைய காதலி கலா அறிந்து மனம் உடைந்தார். சில நாட்களாக அவர் சோகத்துடன் காணப்பட்டார். காதலனுடன் சேர முடியாமல் போய்விடுவோமோ என்று அஞ்சிய அவர் கடந்த 09.09.2010 அன்று விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை, உறவினர்கள் கவனித்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார்.

காதலி விஷம் குடித்ததை கேள்விப்பட்டு மணிகண்டன் சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கலாவின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து அழுதார். மிகுந்த துக்கத்தில் இருந்த அவர் மனம் உடைந்த நிலையில் வீட்டுக்கு வந்தார்.

வீட்டுக்கு வந்தவுடன் சற்று நேரத்தில் மணிகண்டன் விஷம் அருந்தியுள்ளார். இதை அக்கம்பக்கத்தினர் கவனித்து, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டனும் பரிதாபமாக இறந்தார்.

கருத்துகள் இல்லை: