புதன், 8 செப்டம்பர், 2010

த(ற்கொ)லை நகரம் சென்னை யில் 8 மாதத்தில் 640 பேர் தற்கொலை

சென்னை: தமிழ் நாட்டின் தலைநகரமான சிங்காரச் சென்னை, திகிலூட்டும் தற்கொலை [^] நகரமாக மாறி வருகிறது. கடந்த 8 மாதத்தில் மட்டும் சுமார் 640 பேர் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.

எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம் பேர் சென்னையில் உள்ளனர். வாத்தியார் திட்டினால் தற்கொலை, டிவி பார்ப்பதை அம்மா தடுத்தால் தற்கொலை, காதலி திட்டினால் தற்கொலை, காதலி பேசாமல் போனால் தற்கொலை, வேலையில் பிரச்சனை ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என்று நினைக்காமல் தற்கொலை என காரணமே இல்லாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இதில் விந்தை என்னவென்றால் தற்கொலை செய்பவர்களில் அதிகமானோர் ஆண்கள் தான்.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 837 ஆகும். இறந்தவர்களில் 557 பேர் ஆண்கள்.

2010-ம் ஆண்டு தொடங்கி 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த 8 மாத காலத்தில் 640 பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு திருமணமாகி மனைவி, மக்கள் [^] இருக்கின்றார்கள்.

வேகத்தில், விரக்தியில், கோபத்தில் தன்னை நம்பி இருப்பவர்களைப் பற்றி சிந்திக்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்கள் போன பிறகு அவர்கள் குடும்பத்தாரின் வாழ்க்கை சூனியமாகி விடுகிறது. இதை தற்கொலை செய்து கொள்ளும் புண்ணியவாண்கள் யோசித்துப் பார்ப்பதே இல்லை.

சென்னையில் அதிகரித்து வரும் குடும்ப பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி தற்கொலைக்கும் போலீசார் கவுன்சிலிங் அளிக்கின்றனர். ஆனால், இரண்டு பிரச்சனைகளும் குறைந்தபாடில்லை.

இது குறித்து மனோதத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில்,

மனிதனின் வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படத் தான் செய்யும். அதற்குத் தீர்வு உண்டு. தற்போது மனதின் சுமையை இறக்கி வைப்பதற்கு நண்பன் இல்லாமல் நிறைய பேர் இருக்கின்றனர். நல்ல நண்பன் இருந்தால் ஒரு போதும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமே வராது என்று அவர் கூறினார்.

மனச் சுமையை எந்த வகையிலாவது இறக்கி வைத்து, மனதை லேசாக்கி, பிரச்சினைகளை உணர்ச்சி்வசப்படாமல் ஆராய்ந்து, ஆற அமர ஒரு நொடி யோசித்தால் கூட போதும், தற்கொலையை நினைத்தால் பயம்தான் வருமே, தவிர வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணம் நிச்சயம் மறைந்து போகும்.

வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல, வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் வீட்டில் உள்ள அத்தனை பேரும் உட்கார்ந்து அதுகுறித்து மனம் விட்டுப் பேசினால், பிரச்சினை முழுவதும் காணாமல் போய், கலகலப்பு கூடும். செய்து பாருங்களேன், செத்துப் போவது விவேகமல்ல என்பதை உணர்வீர்கள்.

கருத்துகள் இல்லை: