திங்கள், 3 ஏப்ரல், 2017

அந்த மூன்று நாட்கள் .. ஆண்களே தயாரா?

thetimestamil .. கே. ஏ. பத்மஜா: பொதுவாய் எந்த ஆணும் தனித்து இருப்பது அரிது. காதலி, மனைவி, அக்கா, தங்கை, அம்மா இப்படி ஏதோ ஒரு பெண் உறவு அவனை சூழ்ந்து கொண்டுதான் இருக்கும். பெண் தன்னை ஒரு ஆண் மதிப்பதாக,பாசம்வைத்து இருப்பதாக உணரும் தருணங்களில் ஒன்று மாதவிடாய் காலத்தில் அவளை பார்த்துகொள்ளும் விதம் .எனவே கொஞ்சம் பெண்களின் அந்த மூன்று நாட்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பெண் பூப்பெய்தது முதல் ஒவ்வரு மாதமும் கருத்தரிக்காத கருமுட்டைகள் கருப்பை சுவருடன் வெளியேறுவதே மாதவிடாய். எந்த பெண்ணும் இதை விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை மாறாக இயற்கையில் தனது உடல் அமைப்பு என்று மட்டுமே ஏற்றுக்கொள்கிறாள்.

  1. மாதவிடாய் பொதுவாய் மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும்.எல்லா பெண்களுக்கும் இந்த நாட்கள் ஒரே அளவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.சிலர்க்கு ஒரு நாள் மட்டும் இருக்கலாம் அல்லது வேறு சிலர்க்கு ஏழுநாள் வரை வரலாம்.
2.மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே உடலில் மாற்றங்கள் நடக்கத் தொடங்கி விடும். எனவே பெண்கள் சிடுசிடு என இருப்பது,அசதியாய் இருப்பது,எந்த வேளையிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது என அனைத்தும் இயல்பே. வீடு குப்பையாய் இருக்கு சமையலில் நலபோக விருந்து இல்லையென்றோ,அல்லது சின்ன விஷயம் சண்டையாய் மாறினாலோ பெண்களில் மாதவிடாய் மறுவாரம் இருக்கா என்று கவனியுங்கள்.இந்த மாற்றம் தற்காலிகம் என்று புரிந்துகொள்ளுங்கள்.உங்கள் பங்கிற்கு எரியுற தீயில் எண்ணெய் ஊற்றாதீர்கள்.
3.மாதவிடாயின் போது பெண்களுக்கு இடுப்பு வலி அல்லது வயிறு வலி வருவதுண்டு.சில பெண்களுக்கு கால் வலி அல்லது தலைவலி,வாந்தி இப்படி ஏதாவது ஒரு வலி அல்லது வெறும் அசதி மட்டும் கூட இருக்கும்.அவர்களுக்கு எங்க வலி என்று புரிந்து கொண்டு அதற்கு உறுதுணையாய் இருங்கள்.உனக்கு தான் அதிசயமா தலையெல்லாம் வலிக்குது என்று வார்த்தையை கொட்டிவிடாமல் இருப்பது மிக அவசியம்.
4.மாதவிடாயின் போது சில பெண்களுக்கு நீர் ஆகாரம் தான் எடுத்துக்கொள்ள முடியும் சில உணவுகளை அவர்கள் வெறுப்பது இயல்பு.உதாரணமாய் அதிக எண்ணெய்யில் பொறித்த உணவுகளை விரும்ப மாட்டர்.உனக்கு பிடிக்கும் என்று தான் வாங்கி வந்தேன் என அவர்களை கட்டாய படுத்த வேண்டாம்.
5.மாதவிடாயின் போது உடலுறவு என்பது சுகாதாரமாய் இருக்க வாய்ப்பு குறைவு.ரத்த வெளியேற்றம் அதிகம் இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் பெண்கள் உடல் உறவு வைத்து கொள்ள விரும்புவதில்லை. எனவே அந்த நாட்களில் பெண்களை உடலுறவிற்கு வற்புறுத்தாமல் இருப்பது நல்லது. சில பெண்களுக்கு கட்டிப்பிடிப்பது கூட பிடிக்காது; இன்னும் சிலர் கொஞ்சம் அரவணைப்பை எதிர்பார்ப்பது இயல்பு. உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றத்தால் பெண்களுக்கு எது, எப்போது தேவை என புரிந்து செய்வது அவசியம். எனவே உங்கள் மனைவி, மகள், அக்கா இப்படி யாராய் இருந்தாலும் அவர்களுடன் மாதவிடாய் குறித்து பேசுவதும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து அறிந்து கொள்வதும் அவசியம்.
கே. ஏ. பத்மஜா, பத்தியாளர்.

கருத்துகள் இல்லை: