சனி, 8 ஏப்ரல், 2017

வடிவேலு வழக்கில் சிங்கமுத்துவுக்கு நீதிமன்ற அழைப்பாணை.. ஆஜராக உத்தரவு.. தவறினால் பிடிவாரன்ட்

சென்னை: நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள நிலமோசடி வழக்கில் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் வடிவேலுவும் சிங்கமுத்துவும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து நில மோசடி செய்துள்ளதாக நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையை அடுத்துள்ள படப்பையில் தனக்கு சொந்தமான 3.52 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக கூறி, பவர் ஆஃப் அட்டார்னி வாங்கிக் கொண்டு, சிங்கமுத்து அதனை வேறு ஒருவருக்கு ரூ.1.93 கோடிக்கு விற்றுவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இன்னொரு இடத்தை போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் ரூ.12 லட்சத்துக்கு விற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் விசாரணைக்காக வடிவேலு மற்றும் சிங்கமுத்து தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து, நிலமோசடி வழக்கில் நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 20-ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், ஆஜராகாவிட்டால் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது

கருத்துகள் இல்லை: