புதன், 5 ஏப்ரல், 2017

பணிப்பெண் தற்கொலையை வீடியோ எடுத்த குவைத் வீட்டு எஜமானி!



வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்தவர்கள், தங்கள் முதலாளிகளால் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவிலிருந்து பணிக்காகச் செல்பவர்களும் துன்புறுத்தப்படுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குவைத்தில் பெண் முதலாளி ஒருவர், தன்னிடம் பணிபுரியும் பெண் தற்கொலை செய்ய முயற்சி செய்ததைத் தடுக்காமல் அதை வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குவைத்தில் வீட்டு வேலை செய்யும் எத்தியோப்பிய பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது, 7 வது மாடி பால்கனியில் சிக்கிக் கொண்டு பால்கனியின் கம்பியைப் பிடித்து தொங்கியுள்ளார். தன்னைக் காப்பாற்றும்படி அழுது கெஞ்சியுள்ளார். ஆனால் அவரை காப்பாற்றாமல் பெண் முதலாளி அதை வீடியோவாக எடுத்துள்ளார். சில நொடிகளில் அந்தப் பெண் கைநழுவி கீழே விழுந்துள்ளார். ஆனால் அப்பொதும் எந்தப் பதற்றமும் இல்லாமல் அந்த பெண் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், மீட்புக் குழு உதவியாளர்களால் எத்தியோப்பியப் பெண் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கை உடைந்துள்ளது. மூக்கு, காதுகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண் முதலாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். எத்தியோப்பியப் பெண்ணின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
அந்த வீடியோ இணைப்பு https://youtu.be/An2wRnbVXqU
வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ள பெரும்பாலானோர் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும், அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: