சனி, 8 ஏப்ரல், 2017

கிரண் பேடி அவசரமாக டெல்லி பயணம் .. ஆளுநர் பதவி காலி அல்லது குடியரசு.. பதவி பரிசு? ... பேயாட்சி செய்தால் ...

மத்திய அரசின் அவசர அழைப்பால் கிரண் பேடி டெல்லி பயணம்! ...
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வர் மற்றும் ஆட்சியாளர்களுக்குமிடையே அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, புதுவையில் அரசுப் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக ஆலோசனை நடத்துவதற்காக 4 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள் கலந்து கொண்டன.

இதில், அனைத்துக் கட்சி குழுவினர் டெல்லி சென்று கவர்னர் மீது ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் கொடுப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அனைத்துக் கட்சி கூட்டம் பற்றி கவர்னர் கிரண் பேடி கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் நகராட்சி கமி‌ஷனரை மாற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து அதை தலைமைச் செயலாளர் அமல்படுத்தினார். இந்த உத்தரவை கவர்னர் ரத்து செய்து உத்தரவிட்டார். அது மட்டுமில்லாமல், தனக்கு கட்டுப்பட மறுப்பதாகக் கூறி தலைமைச் செயலாளரை மாற்றும்படியும் உள்துறைக்கு புகார் அனுப்பினார்.
கவர்னர், அமைச்சரவை மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி இல்லாமல் அடுத்தடுத்து நடந்துவரும் பிரச்னையால் தற்போது புதுவையில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், கவர்னர் கிரண் பேடியை டெல்லிக்கு வரும்படி மத்திய அரசு திடீரென அழைத்தது. கிரண் பேடி 3 நாள் சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை காரைக்கால் சென்றிருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதாக இருந்தது.
மத்திய அரசு அழைத்ததால் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு வெள்ளிக்கிழமை மாலையே புதுவை திரும்பினார். தற்போது சனிக்கிழமை (இன்று) காலை 6.15 மணிக்கு அவர் கவர்னர் மாளிகையில் இருந்து கார் மூலம் அவர் சென்னை புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து 9.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார்.
டெல்லியில் அவர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திப்பார். பிரதமரையும் அவர் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்போது புதுவையில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவர்கள் கவர்னரிடம் கேட்டு அறியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: