திங்கள், 3 ஏப்ரல், 2017

மாமல்லபுரத்தில் ஜெர்மன் பெண் பாலியல் பலாத்காரம்


மாமல்லபுரத்தில் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதுபோன்று, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 15 பேர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் மாமல்லபுரம் பகுதியில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி சுற்றுலா மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 2) பிற்பகல் 3 மணியளவில் ஜெஸ்டினா (24) என்ற இளம்பெண் 8 கி.மீ., தொலைவு வடக்கில் உள்ள பட்டிபுலம் பகுதி கடற்கரைக்குச் சென்றுள்ளார். கடற்கரையோரமாக சூரியக் குளியலில் இருந்த அப்பெண்ணை 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய நண்பர்களும் மாமல்லபுர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரையடுத்து, காவல்துறையினர் ஜெஸ்டினாவை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து, நான்கு தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்தின்பேரில் இரண்டுபேரிடம் விசாணை நடத்திவருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. நஜ்மல் ஹோடா, காஞ்சிபுரம் எஸ்.பி., சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடற்கரையில் ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜெர்மன் தூதரகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: