வெள்ளி, 7 ஏப்ரல், 2017

சரத்குமார் வீட்டு ரெயிட் பின்னணி ... நாடார் ஓட்டுக்கள் பொன்னார் தமிழிசையிடம் இருந்து சரத்குமாருக்கு போகலாமா?

வருமானவரித்துறையினர் சோதனை
சரத்குமார் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததற்கு இரண்டு தமிழக அமைச்சர்களே காரணம் என்று சொல்கின்றனர் சமத்துவ மக்கள் கட்சியினர்.
ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து, வேட்பாளராக அந்தோணி சேவியர் என்பவரை அறிவித்தது. தொடர்ந்து வேட்பு மனுவை அந்தோணி சேவியர் தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை, மாற்று வேட்பாளரின் வேட்பு மனு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனால், சமத்துவ மக்கள் கட்சி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஆர்.கே.நகர்த் தொகுதியில் நாடார் சமுதாய ஓட்டுகள் அதிகளவில் உள்ளன. இதனால், அந்த சமுதாயத் தலைவர்களின் ஆதரவைப் பெற வேட்பாளர்களிடையே போட்டி நிலவியது. இந்தச் சூழ்நிலையில் ஆர்.கே.நகர்த் தொகுதியில் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சரத்குமார், கட்சி மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார். அப்போது, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு சில கட்சி நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை. இருப்பினும், சரத்குமாரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவர்கள் அமைதியாகிவிட்டனர்.
இதையடுத்து, சரத்குமார், வேட்பாளர் டி.டி.வி.தினகரனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, பேசிய சரத்குமார், 'அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரிவினை மாறி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவருக்காக தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன்' என்றார். சரத்குமார், ஆதரவு தெரிவித்த அடுத்தநாளே அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமக

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமக-வின் மூத்த நிர்வாகிகள் சிலர், "அ.தி.மு.க.வுடன் ச.ம.க. கூட்டணி அமைத்திருந்தது. கூட்டணி கட்சி நிர்வாகிகளை அ.தி.மு.கவினர் மதிக்கவில்லை. இதனால், கூட்டணியிலிருந்து சில கட்சிகள் பிரிந்து சென்றன. ஆனால், கடைசிவரை அ.தி.மு.க. கூட்டணியில் ச.ம.க. இருந்தது. ஆனால், அங்கு எங்களுக்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலாவை, சரத்குமார், ராதிகா ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதன்பிறகு எங்களிடம் சரத்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது, கூட்டணியில் நமது கட்சி இருப்பதால் கட்சியின் பலம் வெளியில் தெரியவில்லை. இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த சமயத்தில்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. தனித்துப் போட்டியிட முடிவு செய்து இடைத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்தோம். ஆனால் எங்கள் வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சரத்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சரத்குமார் தெரிவித்தார். கூட்டத்திலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஏனெனில் சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில் டி.டி.வி.தினகரனை ஆதரித்தால் நமக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும். எனவே, இந்த தேர்தலில் யாரையும்  ஆதரிக்க வேண்டாம் என்று தெரிவித்தோம். ஆனால், சரத்குமாரும், சில நிர்வாகிகளும் சேர்ந்து டி.டி.வி.தினகரனை ஆதரிக்க முடிவு எடுத்தனர். வேறுவழியின்றி சரத்குமாரின் முடிவை ஏற்றுக்கொண்டோம்.
சரத்குமார் இல்லம்

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கச் சொல்லி சசிகலா அணியிலிருந்து இரண்டு அமைச்சர்கள் மூலம் சரத்குமாருக்கு தூதுவிடப்பட்டது. அதில் ஓர் அமைச்சர் சரத்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால், அந்த இரண்டு அமைச்சர்களால்தான் சரத்குமார், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிக்க சம்மதம் தெரிவித்தார். ஆதரவு தெரிவித்த அடுத்தநாளே வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அடுத்து, என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை" என்றனர்.
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டில் சோதனை நடந்தபோது கட்சியினரின் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து, முக்கிய மாநில நிர்வாகிகள், தொண்டர்களுக்கு போனில் அழைப்புவிடுத்துள்ளார். அதன்பிறகே கட்சியினர் அங்கு சென்றுள்ளனர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த சரத்குமார், அமைதியாக இருங்கள். தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். நாம் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு முழுஒத்துழைப்பு கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், சில தொண்டர்கள் தொடர்ந்து சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சரத்குமாரின் வீட்டில் சோதனை என்றதும் சசிகலா அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அங்கு சென்றனர்.   விகடன்

கருத்துகள் இல்லை: