சனி, 8 ஏப்ரல், 2017

போலீசே ரவுடிகள் துணையுடன் பணப்பட்டுவாடா செய்யும் அற்புத காட்சிகள் .. RK Nagar

அரசியல்வாதிகள் சொன்னதை செய்வார்களா, மாட்டார்களா என மக்கள் எப்போதுமே பதைபதைப்புடன் இருப்பார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தைப் பொறுத்தவரை நக்கீரனில் முன்கூட்டியே சொன்ன செய்திகள், ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வருகின்றன.>சொன்னது நடந்தது!">நக்கீரன் மார்ச்27-29 இதழில் "முதல் தவணை ரூ.5000 டோக்கன்! கட்சி நிதி கபளீகரம்!' என ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரன் நடத்த திட்டமிட்டுள்ள பண விநியோகத்தை அட்டைப்பட கட்டுரையாக்கியிருந்தோம். அது அப்படியே ஏப்ரல் 4-ம் தேதி நள்ளிரவில் நிஜமாகத் தொடங்கியது.அதே இதழில் "கமிஷனர் மாறினாலும் போலீஸ் மாறவில்லை' என்ற தலைப்பில் ""கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டாலும், இணைக் கமிஷனர் சாரங்கன், துணைக் கமிஷனர் ஜெயக்குமார் போன்ற அதிகாரிகள் மாற்றப்படாத வரை ஆளும்தரப்புக்கு கவலையில்லை'' என குறிப்பிட்டிருந்தோம். 



பணவிநியோக ஸ்பாட்டில் நக்கீரன்!

புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரியின் வழிகாட்டுதலில் 4ம் தேதி நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு பண விநியோகம் தொடங்கியது. இந்தப் பண விநியோகத்தை கண்டுபிடிக்க நம்மையும் ஆர்.கே.நகரில் உள்ள பாரதி நகர் ஆறாவது தெருவில் உள்ள வாக்காளராக அ.தி.மு.க. டீமிடம் பதிவு செய்து வைத்திருந்தோம். சரியாக பனிரெண்டு மணிக்கு நமது செல்போனுக்கு 98844 62445 என்ற எண்ணிலிருந்து போன் வந்தது. ""நான் அ.தி.மு.க.வின் ஆயிரம்விளக்கு தொகுதி மகளிரணி பகுதிச் செயலாளர் கவுசல்யா பேசுறேன். உங்களுக்குப் பணம் தரப்போகிறோம். உங்கள் வீட்டுக்கு வரலாமா? தூங்கிவிட்டீர்களா?'' என நலம் விசாரித்தது.பணம் விநியோகிக்கப்படுகிறது என அறிந்ததும் நாம் உஷாரானோம். பணம் விநியோகம் செய்யப்படுவதை லைவ் ஆக கவனிக்க ஆர்.கே. நகரை நோக்கிப் பறந்தோம். அதற்குள் 96001 13231 என்கிற எண்ணிலிருந்து மற்றொரு போன் வந்தது. ""நான் கவுசல்யா மகன் பேசுறேன். வீட்லயே இருங்க'' என்றது. நாம் நமது முகவரியாக குறிப்பிட்டிருந்த நமது நண்பர் வீட்டுக்குப் போவதற்குள்,  நமது தொலைபேசி எண்ணுக்குப் போன் போட்டுக்கொண்டிருந்தனர் அ.தி.மு.க.வினர். பாரதி நகருக்கு நாம் சென்று பார்த்தபோது எந்தவிதமான சத்தமும் சலனமும் இல்லை. அந்த நகரில் உள்ள தெருவின் முனையில் உளவுப்பிரிவு போலீசார் சீருடை இல்லாமல் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் நம்மிடம், ""யார் நீ? எங்கே போகிறாய்?'' என விசாரித்தார்கள். நாம் நண்பரின் முகவரியைச் சொல்லி, அவர்களுக்குப் போக்கு காட்டிவிட்டு தெருவில் என்ன நடக்கிறது என நோட்டமிட்டோம். ஒரு ஆட்டோவில் அ.தி.மு.க டீம் பயணித்துக் கொண்டிருந்தது. அந்தத் தெருவில் இருந்த தி.மு.க.வினர் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வீடுகளைத் தவிர அனைத்து வீடுகளுக்கும் அ.தி.மு.க.வினர் சென்று  வந்தனர். அ.தி.மு.கவினரை அழைத்துச் சென்றவர்கள்,  நமது நண்பரின் தெருவில் குடியிருப்பவர்கள் என்பது அந்தக் கும்மிருட்டிலும் அடையாளம் தெரிந்தது.


பட்டுவாடா ஸ்டிக்கர்!

ஒவ்வொரு வீட்டிலும் நுழையும்போது அந்த டீமின் செல்போன் லைட்டுகள் உயிர்பெற்றன. அவர்களது கைகளில் இருந்த வாக்காளர் பட்டியலில் டிக் செய்துவிட்டு ஓட்டுக்கு 4000 ரூபாய் என  இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் இரண்டையும், வேட்டி- சேலை, குத்துவிளக்கு போன்ற பொருட்களையும் கொடுத்துவிட்டு வந்ததை மங்கலான வெளிச்சம் எடுத்துக்காட்டியது. கும்பலாக வந்த அவர்களை நமது நண்பர் வீட்டில் நாம் வரவேற்றோம். நமது செல்போன் எண்ணை குறிப்பிட்டு, "அந்த வீடுதானே' என நம்மிடம் பேசிய கவுசல்யா தலைமையிலான டீம், நண்பர் வீட்டில் பணத்தையும் பரிசுப் பொருட்களையும் கொடுத்துவிட்டு, "தொப்பிக்குத்தான் ஓட்டுப் போடணும்' என நண்பரின் குழந்தையின் தலையில் வைத்து சத்தியம் வாங்கினார்கள். போகும்போது டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்கும் ஸ்டிக்கரையும் ஒட்டினார்கள். நம் நண்பரின் வீட்டு சுவரில் அ.தி.மு.க.வினர் ஏற்கனவே பலவித கணக்கெடுப்புகளை நடத்தி, அதன் அடையாளமாக பலவிதமான வண்ணங்களில் குறிப்பெழுதியிருந்தனர். ""அதன்மீது ஏன் புதிதாக ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள்'' என நாம் கேட்டதற்கு, ""இந்த ஸ்டிக்கர் ஒட்டுனா பண விநியோகம் முடிந்த வீடுன்னு அர்த்தம்'' என புன்சிரிப்புடன் சொல்லிவிட்டு, ""நீங்க தொப்பிக்குத்தான் போடணும்'' என மிரட்டல் கலந்த தொனியில் பேசிவிட்டுச் சென்றார்கள். நண்பர் வீட்டில் மொத்தம் ஆறு ஓட்டுகள். ஒரு ஓட்டுக்கு 4000 ரூபாய் என ஆறு ஓட்டுக்கு 24,000 ரூபாய் மொத்தமாக கிடைத்ததும் அவர் மகிழ்ந்துபோனார். நாம் அந்தப் பண விநியோகத்தை புகைப்படம் எடுக்காமல் ஒத்துழைத்ததற்காக நன்றி சொன்னார். 

பண விநியோகத்துக்கு போலீஸ்-ரவுடி காவல்!

மெல்ல மெல்ல விடிய ஆரம்பித்திருந்தது. அந்த தெருவில் பணவிநியோகம் முடியும்வரை போலீசாரும் அவர்களுக்கு சற்றுத் தள்ளி ஒரு ரவுடி டீமும் நின்றுகொண்டிருந்தது. அதற்குள் ஒரு வாட்ஸ்-அப் மெசேஜில் அஜிஸ்நகரைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகியான திராவிடச்செல்வி என்பவர் மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க.வினரை 9 லட்சத்து 35,000 ரூபாயோடு, தி.மு.க. வழக்கறிஞர்களான ஓம்சிவக்குமார், எஸ்.நாகராஜன் ஆகியோர் உதவியுடன் போலீசில் பிடித்துக் கொடுத்ததாக செய்தி வந்தது. அவரிடம் கேட்டபோது, "" பிடிபட்டவர் யாரிடமெல்லாம் பணம் கொடுத்தாரோ அவர்களிடம் ஆதார் கார்டுகளை ஆதாரமாக வாங்கி வைத்திருந்தார்’’ என்று சொன்னார். அடுத்து நேதாஜி நகரில்  நான்காவது தெருவில் பண விநியோகம் நடப்பதாக தகவல் வந்தது. நாம் போய் பார்த்தபோது மஃப்டி போலீஸார், ரவுடிகள் உதவியுடன் ஆறு பேர் கொண்ட டீம் பண விநியோகம் செய்துகொண்டிருந்தது. நான்கு பேர் வீட்டுக்கு வெளியே நிற்க, இரண்டுபேர் வீட்டிற்குள் சென்று பணம் கொடுத்துவிட்டு வந்தார்கள். 
பக்கா பிளான், கிராண்ட் சக்ஸஸ்!

""என்ன சார் இது?'' என காவல்துறை வட்டாரங்களை விசாரித்தபோது ""இதெல்லாம் பக்கா பிளான் பண்ணி நடந்த வேலை. ஆர்.கே.நகரில் உள்ள ஏழு வட்டங்களில் ஒரு வட்டத்திற்கு பண விநியோகத்தை முடிக்க இரண்டு மணி நேரம் என  புலனாய்வுப் பிரிவு கூடுதல் கமிஷனர் உயர் அதிகாரி திட்டம் தீட்டிக் கொடுத்தார். பண விநியோகம் நடைபெறும் பகுதிகள் மாநகர போலீசார் மற்றும் அ.தி.மு.க. ரவுடிகள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. நள்ளிரவு 11 மணி தொடங்கி காலை 6 மணிக்குள் 90 சதவிகித பண விநியோகத்தை இணை கமிஷனர் சாரங்கனும் துணை கமிஷனர் ஜெயக்குமாரும் துணை நிற்க, பக்காவாக நடத்தி முடித்துவிட்டார்கள் என விளக்கினார்கள். ""இதற்காக துணை கமிஷனர் ஜெயக்குமார் வீட்டுக்குப் போகாமல், தூங்காமல் கடந்த பத்து நாட்களாக அவரது அலுவலகத்திலேயே தங்கி, திட்டமிட்டு வேலை செய்து பண விநியோகத்தை கிராண்ட் சக்ஸஸ் ஆக்கிவிட்டார். மற்ற அதிகாரிகளும் ஒத்துழைத்தனர்'' என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.


தி.மு.க.வின் எதிர்வினை!

காசிமேடு பகுதியில் உள்ள ஹெலன் தெருவில் கட்டுக்கட்டாக பண விநியோகம் செய்தவர்களை, தி.மு.க.வின் நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் கவுதமன் காவல்துறையிடம் பிடித்துக் கொடுக்க ஆயத்தமானார். சூட்கேசுடன் பிடித்துக் கொடுக்க அவர் முயற்சித்தபோது. பணத்துடன் வந்த கும்பல் தங்களுடன் இருந்த வயதான பெரியவரான திருப்பூரைச் சேர்ந்த கமால்பாட்ஷாவை வாக்காளர் பட்டியலுடன் விட்டுவிட்டு ஓடிவிட்டது. அவரிடமிருந்த வாக்காளர் பட்டியலில் அ.தி.மு.க. வாக்காளர்கள் பச்சை நிறம், தி.மு.க. வாக்காளர்கள் சிவப்பு நிறம், நடுநிலை வாக்காளர்கள் ப்ரவுன் கலர் என வண்ணமயமாக ரகம் பிரித்து, அதனடிப்படையில் பணம் கொடுத்ததை நமக்கு காண்பித்தார் கவுதமன். இப்படி தொகுதி முழுவதும் ஒரே இரவில் பண விநியோகம் செய்த அ.தி.மு.க.வினர் பலரைத்  தி.மு.க.வினர் பிடித்துக் கொடுத்தார்கள். அவர்களில் பாதிபேரை போலீசாரே தப்பிக்க வைத்தனர். தி.மு.க.வினர் மற்றும் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்கள் போலீசிடம், "இவர்களைக் கட்டாயம் கைது செய்தே ஆகவேண்டும்' என போராடியதால் 25 பேரை மட்டும் எச்.6 காவல்நிலையத்தில் உட்கார வைத்திருந்தனர். டி.சி.ஜெயக்குமாரின் சிஷ்யப்பிள்ளையான ஆய்வாளர் வீராகுட்டி 25 பேரையும் அவர்கள் வைத்திருந்த 15 லட்ச ரூபாயையும் ராஜமரியாதையோடு ஜார்ஜ்டவுன் கோர்ட்டில், ""தேர்தல் நேரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பணம் விநியோகித்தார்கள்'' என்கிற சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அனுப்பி வைத்தார். எச்.6 காவல்நிலையத்திற்கு நாம் சென்று பார்த்தபோது, அ.தி.மு.க.வினர் பரிசுப் பொருட்களுடன் காவல்நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சிறைக்கு அனுப்பாமல் ஜாமீனில் எடுக்க அ.தி.மு.க.வின் பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான  பொன்ராஜா ஆக்டிவ் ஆக அங்கே அலைந்து திரிந்துகொண்டிருந்தார்.


தூங்கும் கண்காணிப்புக் குழு!

ஒரே இரவில் இவ்வளவு பெரிய பண விநியோகம் நடந்துள்ளதே... இதன்மொத்த மதிப்பு எவ்வளவு என அ.தி.மு.க. வட்டாரங்களைக் கேட்டோம். "200 கோடி ரூபாய்' என்றார்கள். ""இரவு முழுவதும் ஒரு லட்சத்து 20,000 வாக்காளர்களை கவர் செய்தோம். 5ஆம் தேதி மதியம் மிச்சமுள்ள 20,000 வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தோம். முதலில் ஓட்டுக்கு 4000 ரூபாய் என ஆரம்பித்த பண விநியோகம் பிறகு 2000 ரூபாயாக குறைந்தது'' என்றார்கள்.இப்படி இரவு பகல் என பண விநியோகம் நடக்கிறதே... இதையெல்லாம் கண்காணிக்க நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள், பிளையிங் ஸ்குவாடு இவையெல்லாம் எங்கே என தொகுதி முழுவதும் சுற்றித் தேடினோம். எல்லோரும் கார்களில் ஏ.ஸி.யைப் போட்டுக்கொண்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். துணை கமிஷனர் ஜெயக்குமார் இரவு முழுவதும் கண்விழித்ததால் அவரது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த மத்திய துணை ராணுவப் படைகளும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. மாலையில் துணை கமிஷனர் ஜெயக்குமார், இணை கமிஷனர் சாரங்கன் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் தேர்தல் கமிஷனால் மாற்றப்பட்டனர். ஆனாலும் எல்லாவற்றுக்கும் திட்டம் போட்டுக் கொடுத்த அந்த உயர் அதிகாரியை கமிஷன் மாற்றவேயில்லை.
ஆவேச எம்.எல்.ஏ.!

05ஆம் தேதி இத்தனை அலம்பல்கள் என்றால் 06ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வேறு அலம்பல். சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி (தினகரன் ஆதரவாளர்) தனது ஆட்களுடன் பழைய வண்ணாரப்பேட்டையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். டி.என்.09 பி.எஃப்.8805 என்ற எண் கொண்ட அவரது இன்னோவா காரை மடக்கி சோதனை போட்டனர் போலீசார். காருக்குள் இருந்த பாரதியின் ஆள் ஒருவரிடம் பல்க்காக 2,000 ரூபாய் நோட்டுகளைப் பார்த்து ""எதுக்கு இவ்வளவு பணம்'' என போலீஸ் கேட்க, ""என்னோட செலவுக்கு வச்சிருக்கேன். எம்.எல்.ஏ.வான என்கிட்டேயேவா'' என பாரதி எகிற, ""சாரி சார், நீங்க போகலாம்'' என அனுப்பிவிட்டது போலீஸ்.



கார்டனில் மோதல்!

பண விநியோகம் நடக்கும்வரை பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த அ.தி.மு.க. டீம், அதற்குப் பிறகு தொகுதியில் அதிகம் தென்படவில்லை. தீபாவும் ஓ.பி.எஸ்.சும் தங்களது பிரச்சாரத்துக்காக மூன்று மணி நேரம் போக்குவரத்தை நிற்க வைத்தபோதும், அதை தட்டிக்கேட்க தினகரன் அணி தொண்டர் ஒருவர்கூட முன்வரவில்லை. அ.தி.மு.க. தலைமைத் தேர்தல் அலுவலகமே வெறிச்சோடிக் கிடந்தது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதுமே ஒருவித மகிழ்ச்சி க்ளைமாக்ஸில் மூழ்கிக் கிடந்த அந்த வேளையில் போயஸ் கார்டனில் இளவரசி குடும்பத்தாருடன் டி.டி.வி. தினகரன் கடுமையான வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்ததாக போயஸ் கார்டன் வட்டாரம் தெரிவித்தது. அதன் எதிரொலியாக ஜெயா டி.வி.யில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.""ஜெயா டி.வி. நிர்வாகத்தை கவனித்து வருபவர் இளவரசியின் மகன் விவேக். அவர் இப்போது திவாகரன் மற்றும் நடராஜனுடன் நெருக்கமாக இருக்கிறார். ஆர்.கே.நகரில் போட்டியிடுவதை ஆதரித்து ஒரு அறிக்கை தருமாறு சசிகலாவிடம் தினகரன் கேட்டும் சசிகலா தரவில்லை. அதற்குக் காரணம், திவாகரனும் நடராஜனும்தான் என நினைக்கும் தினகரன், இது பற்றி விவேக்கிடம் வெடித்துள்ளார். போயஸ் கார்டனிலிருந்து பல நூறு கோடிக்கு மேல் கட்சி நிதியை எடுத்து தினகரன் இஷ்டத்திற்கு  செலவு செய்தது பற்றியும் வாக்குவாதம் நடந்துள்ளது... அதன் எதிரொலியாக ஜெயா டி.வி. ஆர்.கே.நகர் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டன''' என்கிறது கார்டன் வட்டாரம். ""இந்த மோதல் உடனடியாக சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து சசிகலா, தினகரனை தொடர்புகொண்டு பேசினார்'' என்றும் சொல்லும் கார்டன் தரப்பினர், ""நீ தேர்தலில் நிற்பதை திவாகரனும் நடராஜனும் மட்டும் விரும்பவில்லை என நினைக்கிறாய். முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி உட்பட அமைச்சர்கள் பலபேர் நீ நிற்பதை விரும்பவில்லை. அவர்களிடம் நான்தான் "நீ தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும்... அது கட்சியின் எதிர்காலத்திற்கு உதவும்' என சொல்லி சம்மதிக்க வைத்தேன். அது உனக்கே தெரியும். எடப்பாடியை சம்மதிக்க வைக்க நீயே பலமுறை பேசியிருக்கிறாய். கடைசியில் என் பேச்சுக்கு அனைவரும் கட்டுப்பட்டார்கள். அக்கா(ஜெ) நின்ற இடைத்தேர்தலில் கூட ஓட்டுக்கு 4000 ரூபாய் கொடுத்ததில்லை. இன்று நீ இஷ்டத்துக்கு செலவு செய்கிறாய். இவ்வளவும்  செய்யும் நீ, ஜெயா டி.வி.யில் 24 மணிநேரமும் ஆர்.கே.நகர் பிரச்சாரம் ஓடியும் அது  சரியில்லை என சண்டை போடுகிறாய். "எல்லாம் நான்தான்' என நீ அங்கே சொல்வது, இங்கே என் காதில் விழுகிறது. எல்லாவற்றையும் இடைத்தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தள்ளி வைத்திருக்கிறேன். இங்கே நானும் இளவரசியும் சர்க்கரை நோய்  அதிகமாகி மெலிந்து கிடக்கிறோம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆட்டம் போடுகிறாயா?' என சசிகலா வெடித்ததைக் கேட்ட தினகரன் ஆடிப்போய்விட்டார்'' என்கிறது கார்டன் வட்டாரம்.  
அடுத்த ரவுண்டும் ரெடி!

இந்நிலையில்  ஆர்.கே.நகரில் மரியாதையான வாக்குகளைப் பெறவேண்டுமென்றால் பணம் கொடுத்தால்தான் முடியும் என்கிற சூழலை தினகரனின் பண விநியோகம் ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஓ.பி.எஸ்.ஸும் தனது பங்குக்கு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக வந்த தகவலால் தினகரன் கலங்கிப் போயுள்ளார். எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்பதால் எம்.எல்.ஏ.க்களிடம்  பேசியிருக்கிறார் தினகரன். "இது நமக்கு வாழ்வா? சாவா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல். அதனால் நமது எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சசிகலா கொடுத்த தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாய் கொடுங்கள்' என கேட்டிருக்கிறார் தினகரன். சசிகலா கொடுத்த 4 கிலோ தங்கத்தை வருமானவரித்துறை கண்காணிக்கிறது என நக்கீரனில் செய்தி வந்ததால் 100 எம்.எல்.ஏ.க்கள் தங்கத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, அதைப் பணமாகத் தரச்சொல்லி கார்டனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.இந்நிலையில், "எங்களிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டால் எப்படி' என எம்.எல்.ஏ.க்கள் புலம்புகிறார்கள். இதுபோதாதென்று, வைத்தியலிங்கத்துக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் ஒருவரிடம் 15 கோடி, எம்.பி.க்களுக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் ஒருவரிடம் மூன்று கோடி என தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமே எடுக்கச் சொல்லி வாங்கியுள்ளார் தினகரன். இதையெல்லாம் கண்டுபிடித்துவிட்ட வருமானவரித்துறையும் இதெல்லாம் அடுத்த ரவுண்டு விநியோகமாக ஆர்.கே.நகரில் பாயப்போகும் பணம் என  முடிவு செய்து, பாய்ச்சலுக்குத் தயாராகியுள்ளதாம்.
இறுதிக் கட்டம்!

திட்டமிட்டபடி பணப்பட்டுவாடா நடந்ததால் தினகரன் தெம்பாக உள்ளார். இத்தனை பார்வையாளர்கள் இருந்தும் வேடிக்கை பார்த்ததால் எதிர்க்கட்சிகளின் கோபத்திற்குள்ளாகியுள்ள இந்திய தேர்தல் ஆணையம் டென்ஷனாகியுள்ளது. "பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் நடத்திய எங்களுக்கு ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த முடியாதா?' எனக் கேட்பதுடன், ""தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானிக்கு பதில், மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது. தேர்தல் கமிஷன் நினைத்தால் உடனே தேர்தலை நிறுத்திவிட முடியும். தேர்தலை நிறுத்துவதா? தினகரனை தகுதியிழக்கச் செய்வதா? என்கிற முடிவை 10ஆம் தேதி எடுக்கும்'' என்கிறார்கள் தேர்தல் ஆணைய வட்டாரத்தினர்.
பிணம் போல செட்-அப்!

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெ.வின் உடல் (தேசியக் கொடி போர்த்தப்பட்டது) போல் செட்-அப் செய்து, ஒரு ஜீப்பில் ஏற்றி கொருக்குப்பேட்டை பாரதிநகர் 5-ஆவது தெருவில் 6ஆம் தேதி இரவு வலம் வந்து கொண்டிருந்தார் மாஜி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இதெல்லாம் தேர்தல் விதிமீறல் என்றபடி செட்-அப் பிணத்தை அப்புறப்படுத்தியது போலீஸ்.

-தாமோதரன் பிரகாஷ், அருண்பாண்டியன்
படங்கள்: ஸ்டாலின், அசோக், செண்பக பாண்டியன்  நக்கீரன் 

கருத்துகள் இல்லை: