வியாழன், 6 ஏப்ரல், 2017

விரைவு தபாலில் தலாக் தலாக் தலாக் .. உபி தேர்தல் வாக்குறுதியை நினைவு படுத்தி புகார் ...

தனது கணவர் விரைவு தபால் மூலம் முத்தலாக் அனுப்பியுள்ளதாக பெண் ஒருவர் பிரதமர் மோடியிடம் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி விவாகரத்து செய்யும் முறை வழக்கில் உள்ளது. அதாவது, பொது இடங்களில் வைத்து விவாகரத்து செய்வது, சமூக வலைதளங்கள் மூலம் விவாகரத்து செய்வது, ஆண் குழந்தை இல்லை எனக் கூறி பெண்களை விவாகரத்து செய்வது முஸ்லிம் மதத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

முத்தலாக் முறைக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தவுள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவரை அவரது கணவர் விரைவு தபால் மூலம் விவாகரத்து செய்தது குறித்து பிரதமர் மோடியிடம் ட்விட்டரில் புகார் செய்துள்ளார். அவர் முஸ்லிம்கள் விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் உத்தரப்பிரதேச முதல்வரிடம் ட்விட்டர் மூலம் புகார் அளித்துள்ளார்.
முத்தலாக் முறை பெண்களின் விருப்பத்துக்கு எதிராக இருப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உரிமையைப் பறிப்பது போன்று இருக்கிறது. மேலும், பிரதமர் மோடி உத்தரப்பிரதேச தேர்தலின்போது, பாஜக அரசு முத்தலாக் முறையை எதிர்ப்பதாகவும், அதை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார். அதனால், இந்த பிரச்னை குறித்து தன்னை பிரதமர் சந்திக்க நேரம் ஒதுக்குமாறும், தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டுமெனவும் அலியா சித்திக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: