திங்கள், 11 ஜூலை, 2011

பாஜக ஆட்சியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. விசாரணை?

பாரதீய ஜனதா ஆட்சியின்போது வழங்கப்பட்ட 2 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்கள் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தையும் முழுமையாக விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீடு ஊழல் குறித்து உச்சநீதிமன்றமே நேரடியாக சிபிஐ மற்றும் இதர புலன் விசாரணை அமைப்புகள் மூலம் விசாரித்து வருகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதிலும் குறிப்பாக ஆ.ராசா தொலைத் தொடர்பு மந்திரியாக பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக, மத்திய கணக்கு தணிக்கை கட்டுப்பாடு அதிகாரியின் 2000-வது ஆண்டு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. எனவே அது குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மூத்த வக்கீல் சாந்திபூஷன் அங்கம் வகிக்கும் சமூக சேவை அமைப்பின் சார்பாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து வக்கீல் சாந்திபூஷன் தாக்கல் செய்துள்ள மனுவில், "பாரதி ஏர்டெல், வொடோபோன் மற்றும் ஐடியா போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் இந்த ஒதுக்கீட்டின் மூலம் பெரிதும் பயன் அடைந்ததாக" குற்றம் சாட்டி இருந்தார்.

குறிப்பிட்ட லைசென்ஸ் கட்டண விகிதத்தில் இருந்து வருவாயில் பங்கு அடிப்படையிலான கட்டணத்துக்கு மாற்றப்பட்டதில் இந்த நிறுவனங்கள் பயன் அடைந்ததாக தணிக்கை கட்டுப்பாடு அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

சஹாரா நியூஸ் பத்திரிகையாளர்கள்

இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு இடையூறாக தலையிட்டதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, ராய் மற்றும் 'சஹாரா இந்தியா நியூஸ் நெட்வொர்க்' நிறுவனத்தைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்கள் மீதும் மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய அமலாக்க பிரிவு உதவி இயக்குனர் ராஜேஸ்வர் சிங் தாக்கல் செய்த இந்த மனுவுக்கு 6 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி ராய் உள்பட 3 பேருக்கும் உச்சநீதிமன்றம் அனுப்பி இருந்தது.

கபில் சிபல் மீதும்...

அவர்கள் தாக்கல் செய்துள்ள பதில் மனுக்களும் கோர்ட்டின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை காட்டியதாக மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையும் இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை: