சனி, 16 ஜூலை, 2011

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் போலி சாமியாரை வெளியேற்றுங்கள்


தூத்துக்குடி : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் வரும் நித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி வக்கீல் திருவாண்டி கூறியதாவது: கடந்த ஆண்டு சினிமா நடிகையுடன் படுக்கை அறையில் இருந்த நித்யானந்தா குறித்து பல்வேறு ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. இதனால் தலைமறைவான நடிகையும், கைது செய்யப்பட்ட போலி சாமியார் நித்யானந்தாவும் இன்று வெட்கமில்லாமல் தமிழகத்துக்குள் வந்து பேட்டியளிக்கின்றனர்.

தமிழக அரசு தனக்கு துணை நிற்கும் என நினைத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க வைக்கும் முயற்சியிலும் நித்யானந்தா ஈடுபட்டுள்ளார். நித்யானந்தா ஆபாச காட்சிகள் ஊடகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் வெளிவந்தபோது எந்த கருத்துக்களையும் தெரிவிக்காத இன்றைய ஆட்சியாளர் களும் அவர்களின் கைப்பா வைகளும் இப்போது அவருக்கு வக்காலத்து வாங்குவது தவறான செயலாகும். தமிழக அரசு உடனடியாக நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும். பெங்களூர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு திருவாண்டி கூறினார்.

வக்கீல் ஆனந்த் கேப்ரியேல் ராஜ் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அரசியல் ரீதியாக சில பழிவாங்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதில் ஆபாச சாமியார் குளிர்காய நினைக்கிறார். இதற்கு தமிழக அரசு துணை நிற்பதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 15 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட செய்திக்கு தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறும் நித்யானந்தா இத்தனை காலம் போலீசில் புகார் அளிக்கவில்லை.

நீதிமன்றத்திலும் முறையிடவில்லை. அவரது சிடி உண்மையானது என கர்நாடக சிஐடி போலீசார் நிரூபித்துள்ளனர். தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் நித்யானந்தாவை உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். இவ்வாறு ஆனந்த் கேப்ரியேல் கூறினார்.

கருத்துகள் இல்லை: