புதன், 13 ஜூலை, 2011

சென்னையில் உலக செஸ் போட்டி: ஆனந்த்-போரிஸ்

இந்தியாவில் முதன் முறையாக சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் தற்போதைய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் போரிஸ் கெல்ஃபேண்டு ஆகியோர் மோதவுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் கிர்சன் இலயும்ழினோவ் சந்தித்தார்.

அப்போது 2012ம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான (World Chess championship title) போட்டியை சென்னையில் நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.

இதுவரை இந்தியாவில் சதுரங்கப் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற 24 பேரில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். உலக சதுரங்கத்தில் இந்தியா 7வது இடத்தைப் பெற்றுள்ளது.

2012ம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி, தற்போதைய உலக வாகையரான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் போரிஸ் கெல்ஃபேண்டு ஆகியோரிடையே நடைபெறும்.

இந்தப் போட்டியை 2012ம் ஆண்டு சென்னையில் நடத்திட முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார்.

உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி இதுவரை இந்தியாவில் நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்கான செலவு சுமார் ரூ. 20 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இந்தப் போட்டியில் நடைபெறுவது குறித்து விஸ்வநாதன் ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: