வெள்ளி, 15 ஜூலை, 2011

வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழருக்கு பசில் ராஜபக்ஷ அழைப்பு!

தமிழ் மக்களின் சுபீட்சத்தி லும், விமோசனத்திலும் உண் மையான அக்கறை கொண் டவர்கள் என்றால் புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் முதலீடுகளை செய்ய முன்வரவேண் டும் எனத் தெரிவித்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், நெல்லியடி சந்தை திறப்பு உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.
குடிநீர் மற்றும் மின்விநியோகத் திட்டங்கள், வீதி அபிவிருத்தி வேலைகள் என்பவற்றையும் அமைச்சர் தொடக்கி வைத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யுத்தம் காரணமாக அழிவுற்றுள்ள யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு வடமாகாணத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சகல வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த வகையில் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் நிதி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்நாட்டு தமிழ் மக்களின் சுபீட்சத்திலும், விமோசனத்திலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் எனின் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இங்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும். இது அம்மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தும். இதனை எவரும் மறுக்கமுடியாது.
இதைவிடுத்து தமிழ் மக்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பதாக வெளிநாடுகளில் கூறித்திரிவதால் இந்நாட்டுத் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்காது. இதனை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து செயற்படுவது மிக அவசியம்.
அரசாங்கம் தனது பொறுப்புக்களை நன்கு உணர்ந்து செயற்பட்டு வருகிறது. இந்தவகையில் பலகோடி ரூபா முதலீட்டுடன் உட்கட்டமைப்பு வசதிகள் யாவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையிலான பல அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றன.
உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டுவிட்டது. அப்பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.நெல்லியடி சந்தை மிக விரைவில் பொருளாதார மத்திய நிலையமாக மேம்படுத்தப்படும். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதி, கல்வியைப்போன்று விவசாயத்துக்கும் புகழ்பெற்ற பிரதேசமாகும். யாழ்ப்பாணம் வெங்காய உற்பத்தியில் தன்னிறைவுகண்டு வருகிறது.
யாழ். குடாநாட்டின் திராட்சை, வெங்காயம் மற்றும் மரக்கறி வகைகளை தென்பகுதி சந்தைக்கு அனுப்பி வைப்பதற்கான பிரதான நிலையமாக நெல்லியடி சந்தை மாற்றியமைக்கப்படும். இந்நடவடிக்கை அடுத்துவரும் ஓரிரு வருட காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும்.
சமாதான சூழல் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இப்போது வடபகுதியில் தேர்தல் நடக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஓரிரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களை ஒன்றுபடுமாறும், தங்கள் ஒற்றுமையை உலகிற்குக் காட்டுமாறும் கூறி மக்களை பிழையான வழியில் இட்டுச்செல்ல முயற்சிக்கின்றனர்.
1977 ஆம் ஆண்டு முதல் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளுக்கு தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதற்கென பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அச்சந்தர்ப்பங்களை எல்லாம் வேண்டுமென்றே அவர்கள் நழுவவிட்டார்கள்.
என்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் இதுதான் தமக்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பம் எனக்கூறி மக்களை தவறாக கூறி வழிநடத்தியதால்தான் தமிழ் மக்கள் அழிவுகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இந்த அழிவுகளிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் குறிப்பாக தமிழ் மக்களையும் அரசாங்கம் மீட்டெடுத்திருக்கின்றது.
அம்மக்களின் சுபீட்சத்துக்கான வேலைத்திட்டங்களையும் அரசு முன்னெடுத்திருக்கின்றது. ஆகவே இச்சந்தர்ப்பத்தில் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் இந்நிகழ்வில் அமைச்சர் பசில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை: