செவ்வாய், 12 ஜூலை, 2011

ஜெயேந்திரர் ஆஜராக உத்தரவு.சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்தது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக பணியாற்றி வந்த சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்துள்ளது. இதையடுத்து வருகிற 18ம் தேதி ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கோவில் வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர், ரவிசுப்பிரமணியன், அப்பு உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி புதுச்சேரி கோர்ட்டில் சங்கரராமன் கொலை வழக்கு விசாரிக்கபப்ட்டு வருகிறது. கடும் இழுபறியாக நடந்து வந்த இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை ஒரு வழியாக முடிவடைந்துள்ளது. மொத்தம் 370 பேர் அரசு சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர். ரவி சுப்பிரமணியம் அப்ரூவராகியுள்ளார். ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 24 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

189 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் 92 பேர் மாற்றி சாட்சியமளித்து பிறழ் சாட்சியமாகியுள்ளனர். நேற்றுடன் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. கடைசியாக விசாரணை அதிகாரியான சக்திவேலிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் ஜெயேந்திரர் உள்ளிட்ட 24 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ராமசாமி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு பெரும்பாலும் ஜெயேந்திரர் வருவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Witness trial has been ended in Sankararaman murder case. Totally 189 witnesses were examined in Puducherry sessions court. The court has adjourned the case to July 18 and ordered Jayendrar, Vijayendrar and 22 other accused to appear in person.

கருத்துகள் இல்லை: