செவ்வாய், 12 ஜூலை, 2011

பத்மநாப சுவாமி கோவில் ரகசியத்தை வெளிப்படுத்தியவருக்கு நோட்டீஸ்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் ரகசிய அறைகளில் இருந்த நகைகளின் விபரம் வெளியே தெரிய வரக் காரணமாக இருந்த நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சுந்தர்ராஜன் மீது கோவில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலை கேரள அரசு ஏற்க வேண்டும் என்றும், கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் வைக்கப்பட்டு இருக்கும் நகைகளை கணக்கெடுக்க வேண்டும என்றும் திருவனந்தபுரத்தில் வசிக்கும் சுந்தர்ராஜன் என்ற வழக்கறிஞர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், கோவிலை கேரள அரசு ஏற்று நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோவிலின் ரகசிய அறைகளில் உள்ள நகைகளை மட்டும் கணக்கெடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுதான் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை தற்போது சர்வதேச அளவில் பிரபலம் அடைய வைத்துள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சுந்தராஜன் நெல்லை மாவட்டம் அம்பாமுத்திரத்தை பூர்விகமாக கொண்டவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்பு படையில் பணிபுரிந்தவர். அப்போது அவர் சட்டம் படிக்கவில்லை. தனது தந்தைக்கு உதவி செய்ய பதவியை துறந்து திருவனந்தபுரம் திரும்பினார்.

அதன் பிறகே சட்டம் படித்து வழக்கறிஞரானார். தற்போது இவர் பத்மநாப சுவாமி கோவில் அருகே வசித்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். ஆனால் இவர் முறையாக கோவிலுக்கு வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வசி்ப்பவர்களையும், அலுவலகங்களையும் காலி செய்ய கோவில் நிர்வாகம் தீ்ர்மானித்துள்ளது. இதன்படி அனைவருக்கும் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: