வியாழன், 14 ஜூலை, 2011

ரஞ்சிதா புகார் பின்னணி என்ன?யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது

சென்னை : நித்யானந்தாவுடன் இருக்கும் சிடி குறித்து நிருபர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறிய நடிகை ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார். சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒரே அறையில் நெருக்கமாக இருந்த சிடிக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட பின்னர் ஒன்றரை ஆண்டுகளாக சென்னைக்கு வராமல் இருந்த ரஞ்சிதா, நேற்று திடீரென்று சென்னை வந்தார். போலீஸ் கமிஷனரை சந்தித்தார். இரவில் தி.நகர் நட்சத்திர ஓட்டலில் பேட்டியளித்தார்.

ரஞ்சிதா வந்து அமர்ந்தவுடன், எழுந்து நின்று போஸ் கொடுக்கும்படி போட்டோகிராபர்கள் கேட்டனர். 'இப்படி சொல்லி சொல்லியே என்னை தெருவுக்கு கொண்டு வந்திட்டீங்க’ என்றார் ரஞ்சிதா. பின்னர் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி என்னை பற்றி வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அதனால் எனது சுதந்திரம் பறிபோய் விட்டது. அந்த காட்சிகளை வெளியிட்ட டிவி, பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன்.

நான் ஒரு சாதாரண குடும்ப பெண். நடிப்பது என் தொழில்.
இவ்வாறு ரஞ்சிதா கூறினார். பின்னர் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்:

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இப்போது திடீரென ஏன் புகார் கொடுக்க தோன்றியது?

அதற்கான சூழ்நிலை இப்போதுதான் அமைந்தது. எனக்கு சட்டம் தெரியாது.

சிலருடைய தூண்டுத லின் பேரில்தான் புகார் கொடுத்ததாக பேச்சு நிலவுகிறதே?

அப்படி இல்லை.

சன் டிவி மீது சிலர் வேண்டுமென்றே புகார் கொடுக்கின்றனர். அதை பயன்படுத்தி நீங்களும் ஆதாயம் தேட முயற்சிக்கிறீர்களா?

அப்படி இல்லை.

 நித்யானந்தாவுடன் நீங்கள் இருந்த வீடியோ காட்சி உண்மை இல்லை என்கிறீர்களா?

ஆமாம். அது ஜோடிக்கப்பட்டது.

சிடியும், அதில் உள்ள காட்சிகளும் உண்மைதான் என்று கர்நாடகா நீதிமன்றத்தில் அந்த மாநில போலீஸ் நிரூபித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதே?

அது சரியல்ல.

நீதிமன்றம் பொய் சொல்கிறது என்கிறீர்களா?

அந்த சிடியில் இருப்பது நான் இல்லை.

உங்களை பின்னால் இருந்து இயக்குவது யார்?

நானாகத்தான் இயங்குகிறேன்.

முதல்வரை சந்திக்க போகிறீர்களா?

வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.

உங்கள் புகாரின் நோக்கம் என்ன?

அதையெல்லாம் சொல்ல முடியாது. கமிஷனரிடம் கூறிவிட்டேன். அவர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு ரஞ்சிதா கூறினார். 

இதன் பின்னரும் சிடி குறித்தும் புகார் குறித்தும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அப்செட் ஆன ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார்.

ரஞ்சிதா புகார் பின்னணி என்ன?

பேட்டியை முடித்து ரஞ்சிதா வெளியேறிய பின்னரும், அவரை பற்றிய விவாதமே நிருபர்கள் மத்தியில் நீடித்தது. சன் டிவி குழுமத்தை மட்டுமே குறை சொல்லும் நோக்கத்தையும், அதற்காகவே இவர் சென்னை வந்துள்ளதையும் புரிந்து கொண்ட  நிருபர்கள், கடந்த ஆண்டில் ரஞ்சிதா பற்றி பல தரப்பிலும் வெளியான செய்திகள் குறித்து அலசித் தீர்த்தனர்.

சாமியார் நித்யானந்தா & ரஞ்சிதா தொடர்பான சிடி கடந்த ஆண்டு டிவி சேனல்களிலும், நாளிதழ்கள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் சேனல்களான ஜெயா, ஜெயா பிளஸ், விஜய், ராஜ், மக்கள், பாலிமர், வசந்த், கலைஞர் டிவிகள்  மற்றும்  ஒரு டஜன் தெலுங்கு, கன்னட டிவிகளிலும், ஆங்கில சேனல்களான சிஎன்என்&ஐபிஎன், ஹெட்லைன்ஸ் டூடே, டைம்ஸ் நவ், என்டிடிவி மற்றும் நக்கீரன், தினமலர் இணையதளத்திலும் இந்த சிடி காட்சிகள் வெளியானது.

 இதில் குறிப்பாக டி.வி.9 என்ற சேனலில் ரஞ்சிதாவின் படுக்கை அறைக் காட்சிகள் பற்றிய ஒரு முழுமையான செய்தி தொகுப்பே ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அதில் நடிகையின் செயல் குறித்து பலர் தெரிவித்த கடுமையான விமர்சனங்களும் இடம்பெற்றன. இவர்களை பற்றியெல்லாம் வாய் திறக்காத இந்த நடிகை, சன் டிவி குழுமம் மீது மட்டும் குறி வைத்துள்ளதை பார்க்கும்போது, யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது மட்டுமல்ல; எங்கிருந்தோ இயக்குபவர்களின் வலையில் விழுந்துள்ளார் என்பதும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: