வெள்ளி, 5 ஜனவரி, 2018

அண்ணா தொழிற்சங்கத்தைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவோம் அரசின் வீண் முயற்சி ..

மின்னம்பலம்: புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை நிறுத்த உடனடியாக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜனவரி 5) வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்னிலையிலும் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ‘நிதி இல்லை’ என்ற காரணத்தைக் காட்டி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிராகரித்ததின் விளைவாக, மாநிலம் முழுவதும் இன்றைக்குப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், முன்கூட்டியே தொழிலாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை, போக்குவரத்துத்துறை அமைச்சர் உரிய காலத்தில் அக்கறையுடனும், பரிவுடனும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண எந்தவித முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ள அவர், “:உங்கள் கோரிக்கை நியாயமானதுதான், என்று போக்குவரத்துத்துறை அமைச்சரே தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதற்கேற்ப அந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தொழிலாளர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை எட்டுவதுதான் பொறுப்பான அரசின் கடமையாக இருக்க முடியும்” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்யாமல், “ ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்கத்தைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவோம் என்று அறிவித்து, அதற்கான முயற்சிகளை எடுப்பது, அதிமுகவின் வீண் ஜம்பத்தையும், ஆணவப்போக்கையும் வெளிப்படுத்தி, கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் விரலைவிட்ட குழந்தையின் கதைபோல ஆகிவிடும்” எனவும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: