வியாழன், 4 ஜனவரி, 2018

Padman - "அருணாச்சலம் முருகானந்தம்" உபகண்டம் போற்ற வேண்டிய உயர்ந்த மனிதன்

Shalin Maria Lawrenc : எனக்கு இந்த உலகில் இரண்டு ஆண்களை மிகவும் பிடிக்கும்.
1.இந்த உலகத்தில் முதலில் கால் பதித்தது ஒரு பெண் என்று ஆராய்ந்து சொன்ன ஒருவர்.
2.பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினை கண்டுபிடித்தவர்.
முதலில் குறிப்பிட்டவர் பெண்ணடிமைத்தனத்தின் ஆணி வேறான மத கட்டுக்கதைகளை உடைத்தவர்.
இரண்டாவது மனிதர் பெரும்பாலான பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து முன்னேற ஊன்றுகோளாய் இருந்தவர்.
கொஞ்சகாலம் முன்பாக மூன்றாவதாக ஒரு ஆண் என் கண்கலங்க வைத்தார் .
அவர் அமெரிக்கரோ இல்லை ஐரோப்பியரோ இல்லை .இந்த தமிழ் மண்ணில் பிறந்த சூப்பர் ஹீரோ அவர் .
"அருணாச்சலம் முருகானந்தம்"
இந்த உலகத்தில் கண்டுபிடிப்புகளுக்கு காரணியாக இருப்பது மூன்று விஷயங்கள் இருக்கின்றன
அறிவியல் மீதான காதல்
மானுடத்தின் மீதான காதல்
மனைவியின் மீதான காதல்
நம் வாழ்வின் அன்றாட பாரங்களை குறைக்கும் பல அரிய கண்டுபிடிப்புகள் அந்த மூன்றாம் காரணத்தால் உண்டானவைதான் .
இந்த காரணம்தான் இன்று நான் அருணாச்சலம் முருகானந்ததை பற்றி எழுத என்னை ஊந்தியது.
மனைவியின் மீது கொண்ட காதல் ஒரு மனிதனை சிந்திக்க வைத்தது ,தீர்வுகள் தேடி ஓடவைத்தது ,விசித்திர வழிகளை கையாள வைத்தது ,பைத்தியக்காரன் என்கிற பட்டத்தை வாங்கி தந்தது ,எந்த மனைவிக்காக இதெல்லாம் செய்தாரோ அவரே இவரை பிரிய வைத்தது ,இறுதியில் சாதனையாளர் ஆக்கியது.இதுதான் அருணாச்சலத்தின் கதை.
கோயம்புத்தூரில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்
அருணாச்சலம்.கல்யாணம் ஆன முதல் மாதம் ஆசை மனைவி மாதவிடாய் நேரத்தில் கந்த துணி சகிதம் கஷ்டப்பட மனைவியின் துயர் துடைக்க முற்படுகிறார் .
கடையில் விற்க்கும் விலை உயர்ந்த நாப்கின் போலவே வீட்டில் தானே பருத்தியை பயன்படுத்தி ஒரு நாப்கினை தயார் செய்து மனைவியை உபயோகிக்க சொல்லுகிறார் .
மனைவிக்கோ இது சரியாக பயன்படவில்லை.
ஒவ்வொரு மாதம் வெவேறு முறைகளில் நாப்கின் தயாரித்து மனைவியை சோதிக்க சொல்லுகிறார் .முயற்சி தோல்வியில் முடிகிறது. மனைவி ஒத்துழைக்க மறுக்கிறார்.
மருத்துவ கல்லூரியை சார்ந்த பெண்களை அணுகி இந்த விஷயத்தை சொல்லுகிறார் .அவர்கள் வெட்கப்பட்டு மறுக்கிறார்கள்.
வேறு வழி இல்லாமல் போக .தானே பெண்ணாக மாற முடிவெடுக்கிறார் அருணாச்சலம்.
மாதவிடாய் என்கிற வார்த்தையை சொல்லவே தயங்கும் ஆண்கள் வாழும் இந்த நாட்டில் வயிற்றை சுற்றி ஆட்டு ரத்தத்தை ஒரு பையில் கட்டிக்கொண்டு ஒரு டியூப் வழியாக அந்த உதிரத்தை வரவைத்து கொள்ளுகிறார். சோதிக்க தயாரித்து வைத்திருக்கும் நாப்கினை அவரே உபயோகிக்கிறார்.
அந்த நாப்கினை அணிந்து கொண்டு தன் அன்றாட அலுவல்களை கவனிக்க சொல்லுகிறார்.
ஆடை வழியே கசிந்த ரத்தம் ,ரத்த வாடை என்று மனிதர் உலா வர சுத்தி இருக்கும் சமுகம் அவரை பைத்தியக்காரன் ,கேவலமானவன் எந்தது பேச ஆரம்பிக்க .நேசித்த மனைவி அவரை பிரிகிறார். விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார்.
அப்படியும் இந்த மனிதர் தளராமல் கிட்ட தட்ட ஐந்து வருடம் போராடி மிக குறைந்த விலையில் தயாராகவும் சானிட்டரி நாப்கின் ஒன்றை கண்டுபிடிக்கிறார் .அதை செய்யும் ஒரு நவீன இயந்திரத்தை உருவாக்குகிறார் .
தன் முயற்சியில் அபரிதமான வெற்றிபெற்ற அவரின் நாப்கின்கள் இன்று இந்தியா முழுவதும் விற்கப்படுகின்றன.அவரின் கீழ் பல பெண்கள் வேலை செய்கிறார்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டது.
சிறந்த தொழிலதிபர் ,நம்பிக்கை பேச்சாளர் போன்ற அனைத்து விருதுகளுக்கிடையே அவரின் மனைவியும் அவரோடு இணைகிறார்.
சுபம்...என்று போட்டு இந்த பதிவை முடித்துவிட தோன்றுகிறது .ஆனால்....
இந்த மனிதன் செய்த செயல் ஒரு சுபத்தோடு முடிய வேண்டிய ஒன்றல்ல .பல தலைமுறையினருக்கு சென்று சேர வேண்டிய சமூக பொக்கிஷம் அருணாச்சலத்தின் கதை.
ஏனென்றால் இது போன்றோரின் சாதனை கதைகள் இந்த சமுதாயத்தை நல்ல முறையில் மாற்ற கூடிய வல்லமை கொண்டது.
அப்படிபட்ட ஒரு கதையை நம் தமிழ் சினிமா புறக்கணித்திருக்கிறது.
எங்கு கேட்டாலும் கதை பஞ்சம் கதை பஞ்சம் .இந்த மண்ணில் இல்லாத கதைகளா ?
மேலே சொன்ன இந்த சாதனை கதையை ஹிந்தியில் தற்பொழுது வெற்றிகரமாக இயங்கிவரும் அக்ஷய் குமார் என்கிற ஒரு ஆக்ஷன் நாயகன் நடித்திருக்கிறார்.
அக்ஷய் குமார் செய்யாத மாஸ் ஹீரோ ரோல்களே கிடையாது ஆனால் சில வருடமாக அவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மயிற்கூச்சரிய வைக்கின்றன.
விட்டு பிரிந்துபோன மனைவியின் குறிக்கொள்ளாக அவருக்கு கழிவறை கட்டிக்கொடுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த "toilet ek prem katha" என்கிற ஒரு படத்தில் அவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் தான் வெளியானது.அதன் தொடர்ச்சியாக "Padman " என்கிற பெயரில் வெளியாக போகும் அருணாச்சலம் முருகானந்தத்தின் கதையிலும் அக்ஷய் குமார்தான் ஹீரோ.
ஹிந்தியில் அக்ஷய் குமாருக்கு ஒரு நல்ல மார்க்கெட் இருக்கிறது ,ஒரு ஆக்ஷன் ஹீரோ இமேஜ் இருக்கிறது.இவையெல்லாம் இருக்க அவர் இது போன்ற கதைகளில் நடிக்க தேவையில்லைதான். ஆனாலும் இது போன்ற கதைகளை தேடி நடிக்கிறார் .
ஏன் ?
இந்த சமூகத்தின் மேல் உள்ள ஒரு காதலினால்.
சரி மார்க்கெட்டிங் நுட்பம் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.
இது இருந்தபோதும் தன் இமேஜை ஒரே இரவில் உடைத்து போடும் அந்த தைரியம் இருக்கிறதே அதுதான் தேசிய விருதுகள் வாங்கி கொடுக்கும் வல்லமையுடையது.
இந்த ஒன்றுதான் அக்ஷய் குமாரை நான் சூப்பர் ஸ்டார் என்று விசிலடித்து கைத்தட்டி ரசிக்க தூண்டுகிறது.
இந்த சமூகத்தின் மேலுள்ள காதலினால் இமேஜை நடிகர்கள் உடைக்கும்போது அவர்களை உலகம் கொண்டாடுகிறது.
ஆனால் நம் மாநிலத்தை சார்ந்த சூப்பர் ஸ்டார் ,தல, தளபதி ,அல்டிமேட் ,சுப்ரீம்கள் எல்லாம் கடைசி வரை ஒரே மாவை வித விதமாக அரைத்துக்கொண்டு அதில் ஒரே தோசையை ஊற்றி கொண்டிருகின்றனர் .பெயர் மட்டும் வேறு வேறு.
நான்கு பன்ச் டயலாக் ,ஐந்து சண்டை ,மூன்று இரட்டை அர்த்த வசனம் ,ஆறு பாடல்கள்.அவ்வளவு போதும் இங்கே உலகத்தரம் பட்டம் வாங்க. அவர்கள் தன் இங்கே உச்ச நட்சத்திரங்கள்.
ஒரே ஆக்ஷன் சப்ஜெக்ட்டை சர்பத் போல் வித விதமான கலர் க்ளாஸ்களில் ஊற்றிவிட்டால் ஹாலிவூட் தர இயக்குனர் ஆகி விடலாம்.
நம் மண்ணின் கதையை நாம் எடுக்காமல் புறக்கணித்து ,அதை ஹிந்திக்காரர்கள் கொண்டாடவதெல்லாம் .வெட்கக்கேடு.
ஷாலின்
Bala Murali Krishna 5 ரூபாய் டாக்டர், 2 லட்ச ரூ சம்பளத்தை உதறி விட்டு விவசாயம் பார்க்கும் IT நபர், முதல் திருநங்கை காவலதிகாரி இப்படி நல்ல விஷயங்கள் இங்க கொட்டி கிடக்கு. ஆனா எதார்தம் வேற மாதிரி இங்க இருக்கு. நிச்சயம் தமிழ் சினிமா இதை தவறவிட்டிருக்க கூடாது. ஆனா ஹிந்தி படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் இருக்கற அந்த மார்கெட் அளவுல நிறைய வித்தியாசம் இருக்கு. Maybe தயாரிப்பாளர்கள் இந்த Risk எடுக்க தயங்கியிருக்கலாம் !

கருத்துகள் இல்லை: