செவ்வாய், 2 ஜனவரி, 2018

புனே கலவரம் மும்பைக்கும் ...முழு அடைப்பு போராட்டம்


Kiruba Munusamy : பீம கோரேகாவ்ன் போரானது மராத்திய மன்னராட்சியை அகற்றி, மனு ஆட்சியை நிலைநாட்டிய பாஜி ராவ் (பேஷ்வா மராட்டிய பார்ப்பன) படையை எதிர்த்து தலித்துகள் வென்றதாகும். இப்போரின் வெற்றியானது ஜாதிய-பார்ப்பனிய ஆதிக்கத்திற்கெதிரான வெற்றியின் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. பார்ப்பனிய ஒடுக்குமுறையை வீழ்த்தும் பொருட்டு இப்போரில் உயிர்நீத்த 22 தலித்துகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி புனேவில் உள்ள நினைவிடத்தில் தலித்துகள் கூடுவதுண்டு.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உயிரோடு இருந்தவரையிலும், ஆண்டு தவறாமல் அந்நினைவிடத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
அந்தவகையில், இந்த ஆண்டும் நினைவேந்தலுக்காக இந்தியா முழுவதிலிருந்தும் அங்கு வந்திருந்த தலித்துகளை, காவிக் கொடி ஏந்திய ஜாதிவெறிக் கும்பல் தாக்கவே, புனேவிலும்-மும்பையிலும் இன்று பதட்டமான சூழல் நிலவுகிறது.
ஜாதிவெறியர்களே வந்து நாங்கள் தான் தாக்கினோம் என்று கூறினாலும், ஜாதி கலவரம் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்ட ஊடகங்கள், இப்போது மட்டும் மாறிவிடுவார்களா என்ன?

ஜாதியத்திற்கு எதிரான வெற்றியாக கொண்டாடும் நிகழ்வை, பேஷ்வாக்களுக்கெதிரான ஆங்கிலேயர்களின் வெற்றியை கொண்டாடுவதாக பொய் பரப்புரை செய்யும் என்டிடிவி தொலைக்காட்சியை கண்டிப்பதோடு, தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய ஜாதிவெறியர்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமல் தலித்துகள் மீதே அடக்குமுறையை கட்டவிழ்க்கும் அரசிற்கும், காவல்த்துறைக்கும் எதிராக பிரகாஷ் அம்பேத்கர் நாளை அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்தையும் ஆதரிக்கிறேன்.

தினமலர் :மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் நேற்று(டிச.,1), 1818 ம் வருடம் நடந்த போரில் கிடைத்த வெற்றியை ஒரு தரப்பினர் கொண்டாடினர். அப்போது, அங்கு வந்த மற்றொரு தரப்பினருக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து இது வன்முறையாக மறியது. ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது மற்ற பகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் புனே அஹமது நகர் தேசிய நெடுஞ்சாலையை மூடினர். மக்கள் நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடு விதித்திருந்தனர்.

எச்சரிக்கை
கலவரம் தொடர்பாக முதல்வர் பட்நாவீஸ் கூறியதாவது: மஹாராஷ்டிரா வளர்ச்சியடையும் மாநிலம். இங்கு ஜாதி கலவரத்திற்கு இடமில்லை. அதில் நம்பிக்கையுமில்லை. சமூக வளைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், கலவரம் தொடர்பாக பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

கலவரம்
இந்நிலையில், இந்த கலவரம் தலைநகர் மும்பைக்கும் பரவியது. ஏராளமானோர் பேரணியாக சென்றனர். சில இடங்களில் கல்வீசப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் கலவர தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். கிழக்கு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் ஒரு சில இடங்களில் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டன. செம்பூர், விக்ரோலி, மன்குர்த், கோவண்டி உள்ளிட்ட பகுதிகளில் மீடியாக்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது<

கருத்துகள் இல்லை: