வெள்ளி, 5 ஜனவரி, 2018

போக்குவரத்து ஊழியர் பேச்சுவார்த்தை தோல்வி.. வேலை நிறுத்தம் தொடரும் ...

ஸ்தம்பிக்கும் தமிழகம்!மின்னம்பலம்: பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று இரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு, பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்; ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஒப்பந்தப் பலன்களை ஓய்வூதியத்தோடு இணைந்து வழங்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு அளிக்காவிட்டால் ஜனவரி 3ஆம் தேதிக்குப் பிறகு போராட்டம் அறிவிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்திருந்தன.
இந்தச் சூழ்நிலையில் சென்னை குரோம்பேட்டை பணிமனையில் நேற்று (ஜனவரி 4) மீண்டும் 13ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாகப் போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 36 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பிலிருந்து 2.44 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், தங்களுக்கு 2.57 சதவிகித ஊதிய உயர்வு நிர்ணயிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவை அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்துவந்த நிலையில் கோயம்பேடு, அடையாறு, கிண்டி, திருவான்மியூர், தாம்பரம், பிராட்வே ஆகிய பேருந்து நிலையங்களில் பல பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோல பல்வேறு மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியது. இதன் காரணமாக வேலைக்குச் சென்ற பயணிகள் நேற்று மாலை வீடு திரும்ப முடியாமல் மிகுந்த அவதியடைந்தனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வை வழங்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வின் மூலம் மாதம் ஒன்றுக்குக் கூடுதலாக ரூ.83 கோடி செலவாகும்” என்ற அமைச்சர்,
“அரசு ஊழியர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் அரசு ஊழியர்களை விட போக்குவரத்து ஊழியர்களுக்கே அதிக ஊதியம் வழங்கப்படுகிறது” என்றும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து அவர், “போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பான ஊதிய உயர்வை அரசு வழங்கியுள்ளது. ஊதிய ஒப்பந்தத்தை ஏற்றுப் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். அரசு, பொதுமக்களுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் அவர்கள் பணி செய்ய வேண்டும். பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலைநிறுத்தம் அறிவித்துள்ள தொழிற்சங்கத்தினரால் பெரும் பாதிப்பு இருக்காது. அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ள 70% உறுப்பினர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
“ஊதிய உயர்வு குறித்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை கருணையுடன் பார்க்க அரசு தவறிவிட்டது. அரசே கஷ்டத்தை தாங்க முடியாது என்றால் சாதாரண தொழிலாளி கஷ்டத்தை எப்படி தாங்குவான்? எனவே 2.44 காரணி ஊதிய உயர்வை எந்தக் காலத்திலும் நாங்கள் ஏற்க மாட்டோம். தொடர்ந்து நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 95% தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்” என்று சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வேலைநிறுத்தத்தில் 13 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளன. மேலும் தொழிலாளர்கள் சங்கப் பலகையிலும், ‘பேச்சுவார்த்தை தோல்வி எனவே தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெறும்’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனால் இன்று (ஜனவரி 5) பேருந்துகள் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் பேருந்துகளை இயக்கினாலும், குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படும் என்ற நிலையில், பேருந்துகளை நம்பியுள்ள மக்கள் வழக்கம்போல தங்களின் அன்றாடப் பணிகளைக் கவனிக்க முடியுமா என்ற கவலையும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: