சனி, 6 ஜனவரி, 2018

திருமாவளவன் : மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதல்! 8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதல்!
8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்!
விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு
~~~~~~~~~~~
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மதவாத சக்திகளும் சாதிவெறி சக்திகளும் ஒன்றிணைந்து தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். அதில் தலித் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்தாமல் மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசு வகுப்புவாதிகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையைக் கண்டித்து எதிர்வரும் 8ஆம் தேதி திங்கட்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

1818 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள பீமா நதிக்கரையில் பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட பேஷ்வாக்களின் படையை சில நூறு தலித் வீரர்களைக்கொண்ட பிரிட்டிஷ் படை தோற்கடித்தது. அந்தப் போரில் பேஷ்வாக்கள் தோற்கடிக்கப்பட்டதோடு அவர்களது ஆட்சி முடிவுக்கு வந்தது. பிராமணப் பிரிவைச் சேர்ந்த பேஷ்வாக்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட அந்த நாளை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தலித்துகள் பெருமிதத்தோடு நினைவுகூர்ந்து வருகின்றனர். அங்கு பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் தலித் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் அங்கு லட்சக்கணக்கான தலித் மக்கள் கூடி அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
பீமா - கோர்காவுன் என அழைக்கப்படும் அந்தப் போரின் 200வது நினைவு தினம் மிகுந்த எழுச்சியோடு இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மட்டுமின்றி பீகார் உத்தரப்பிரதேசம் எனப் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான தலித்துகள் அங்கு கூடினர். தலித்துகளின் எழுச்சியைத் தாங்க முடியாத மதவாத சக்திகள் சாதிவெறியர்களோடு கைகோர்த்துக் கொண்டு அங்குவந்த தலித்துகளைத் தாக்கியுள்ளனர். பல இடங்களில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, ஏராளமான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசாங்கம் வகுப்புவாதிகளைக் கட்டுப்படுத்தவோ கைது செய்யவோ நடவடிக்கை எடுக்கமால் நீதிக்கேட்டுப் போராடும் தலித் மக்களைக் கலவரக்காரர்கள் என சித்திரிப்பதிலேயே கவனமாக உள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் வீரமோடு போராடும் தலித் மக்களுக்கு எமது ஆதரவை தெரிவிக்கும் விதமாகவும் வகுப்புவாத சக்திகளை கண்டிக்கும் விதமாகவும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஜனநாயக சக்திகளும் திரளாக இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்.
நிறுவனர் - தலைவர்
விசிக.

கருத்துகள் இல்லை: