திங்கள், 1 ஜனவரி, 2018

ஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் தலித் சிறுவன் உயிரிழப்பு.. திருச்சி பஞ்சப்பூர் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி

tamilthehindu :ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் திருச்சி பஞ்சப்பூர் அருகேயுள்ள இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில், குளிர்கால 7 நாள் பயிற்சி முகாம் கடந்த டிச.25-ம் தேதி தொடங்கியது.
இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 15-வயதுக்கு மேற்பட்ட 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு, 28 பயிற்றுநர்கள் அடங் கிய குழுவினர் யோகா, தற்காப்பு கலைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தனர். மேலும் தேசபக்தி, தனிமனித ஒழுக்கம், இந்து மதத்தின் சிறப்புகள் குறித்தும் விளக்க மளித்து வந்தனர். இந்நிலையில், இங்கு பயிற்சிக்கு வந்திருந்த மணப்பாறை அருகே உள்ள இளங்காகுறிச்சியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன்- சரோஜா தம்பதியின் மகனும், 9-ம் வகுப்பு மாணவருமான விஜய் (15), நேற்று முன்தினம் இரவு கட்டிடத்தின் 2-வது மாடியிலுள்ள படிக்கட்டு கைப் பிடியில் அமர்ந்து சறுக்கியபடி கீழே இறங்கி விளையாடியுள்ளார். அப்போது, எதிர்பாராமல் கைப்பிடி சுவரிலிருந்து தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.

தகவலறிந்த மணிகண்டம் போலீஸார் விஜய் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு, விஜயின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மணிகண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இன்று நிறைவுபெறுவதாக இருந்த பயிற்சி முகாம், மாணவர் மரணத்தையடுத்து நேற்றே முடித்துக் கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை: