வியாழன், 4 ஜனவரி, 2018

லாலு தண்டனை: மிரட்டப்பட்டாரா நீதிபதி? ஜெயா பாணி?

லாலு தண்டனை: மிரட்டப்பட்டாரா நீதிபதி?மின்னம்பலம் :கால்நடை தீவன வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு இன்று (ஜனவரி 4) தண்டனை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாகத் தண்டனை விவரங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கால்நடைகள் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 16 பேரை குற்றவாளிகள் என ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சிவபால் சிங் கடந்த மாதம் 23ஆம் தேதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தீர்ப்பு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இறந்துபோன 2 வழக்கறிஞர்களுக்கு நேற்று நீதிமன்றத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றதையடுத்து தீர்ப்பு விவரம் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி, இன்று பிற்பகல் 2 மணிக்குத் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜரானார். தண்டனை விவரத்தை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் அறிவிப்பதை விரும்புகிறீர்களா என லாலுவிடம் நீதிபதி சிவ்பால் கேட்டார். “நீதிமன்றம் விரும்பினால் நீதிமன்றத்தில் ஆஜராக தயார்” என்று லாலு பதிலளித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், “லாலுவின் நபர்களிடம் இருந்து தனக்கு அழைப்புகள் வந்ததாகவும், அவருக்காகப் பலர் பரிந்துரைத்ததாகவும் கூறிய நீதிபதி, எனினும் சட்டத்தின்படியே தான் செயல்படுவேன் என்றும் குறிப்பிட்டார். எனினும் தொடர்புகொண்டவர்கள் பற்றியோ அவர்கள் கூறியவை பற்றியோ அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இறுதியில், தீர்ப்பை நாளை(ஜனவரி 5) அறிவிப்பதாக அவர் தெரிவித்தார். வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமே தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கின் பின்னணி
பீகார் மாநிலத்தில் 1991ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக லாலு மற்றும் அவரது சகாக்கள் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒன்றான சாய்பாஷா கருவூலத்தில் 37.5 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இந்தத் தீர்ப்பினால், லாலு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உண்டானது.
இந்த வழக்கின் விசாரணை ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், மீதமுள்ள 4 வழக்குகளிலும் ஒரேவிதமான குற்றம் மற்றும் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது லாலு தரப்பு. இந்த வழக்குகளை விசாரிக்கத் தடை வேண்டுமென, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு தரப்பு தடை கேட்டது. இதனையடுத்து, கடந்த 2014ஆம் ஆண்டு கால்நடை தீவன ஊழல் தொடர்பான மீதமுள்ள 4 வழக்குகளையும் விசாரிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கால்நடை தீவன ஊழல் தொடர்பான மீதமுள்ள 4 வழக்குகளையும் விசாரிப்பதற்கான தடை நீக்கப்பட்டது.
இந்த வழக்கில், கடந்த டிசம்பர் 23-ல் தீர்ப்பளித்த நீதிபதி சிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: